தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஒரு தசாப்தம் கடந்துவிட்டபோதும் போரில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள், பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை.
தமது அன்புக்குரியவர்களை இராணுவத்தினரடம் கையளித்து தேடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கும் எந்தப் பதிலும் இல்லாத நிலையும் நீடிக்கிறது.
போரின் இறுதியில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பங்கள் மற்றும் போரில் சம்பந்தப்படாத சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் மத குருமாhர்கள் என ஆயிரக்கணக்காணவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களாகவே இன்னமும் இருக்கிறார்கள்.
இவ்வாறு சரணடைந்தவர்களின் ஒருவர்தான் கிறிஸ்தவ மதகுருவாக அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார். பிரான்சிஸ் அடிகளாருடன் போராளிகள், அவர்களின் குடும்பங்கள், பொதுமக்கள் என குறைந்தது 360 பேர் வரை சரணடைந்தனர்.
இவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான கண்கண்ட சாட்சிகள் இன்னமும் உள்ளன.
ஆனால் இவர்களின் நிலை என்ன? என்பது இன்றுவரை விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
அருட்தந்தை பிரான்சிஸ் தமிழ் மக்கள் சார்பாக செயற்பட்டவர்கள். தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்.
ஆனால் அவர் ஒருபோதும் ஆயுதம் தூக்கியவரல்ல. தன்னுடைய வார்த்தைகளையே தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான ஆயுதமாக்கியவர் அவர்.
இறுதி யுத்தத்தின்போது பல்வேறு தரப்புக்களுடன் தொடர்புகொண்டு வன்னியில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள் தொடர்பில் அவர் பேசியுள்ளார். அவற்றைத் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்தவ தலைமைப்பீடமான வத்திக்கானிடம் கூட அவர் இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்தார்.
இறுதிக் கட்ட ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர் வந்திக்கானுக்கு 3 பக்கங்களைக் கொண்ட கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
அனைவராலும் கைவிடப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் அவர்களை மீட்க சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் அவர் கோரியுள்ளார். பதுங்கு குழிக்குள் இருந்தவாறே இந்தக் கடிதம் அவரால் எழுதப்பட்டுள்ளது. எனினும் 10 ஆண்டுகள் கடந்தும் இவ்வாறான பல கோரிக்கைகளுக்கு மௌனமே பதிலாகக் கிடைத்தது.
யுத்தக் குற்றங்கள், படுகொலைகள், காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் நீதி வழங்குதில் இலங்கை அரசிடம் இருந்து மௌனம். நீதியைப் பெற்றுத் தருவதில் சர்வதே சமூகத்திடம் இருந்து மௌனம்.
ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மனித உரிகைகள் அமைப்புக்களும் 10 ஆண்டுகள் கடந்தும் மௌனமாக இந்த விடயங்களை கடந்து செல்லவே முயல்கின்றன.
இதேவேளை, போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் 10 ஆம் ஆண்டின்போது அருட்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானுக்கு எழுதிய கடிதத் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பி.பி.சி. செய்திச் சேவை வத்திக்கானுடன் தொடர்புகொண்டு இந்தக் கடிதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அறிக்கையிட்டுள்ளது பி.பி.சி.
தமிழினத்தை அழிக்க இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கின்றது, இது ஒரு இனப்படுகொலைக்கான போராகும் என அக்கடிதத்தில் அருட்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள், சிறுவர்களின் கதறல்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என அனைவரதும் மனித ஓலங்களே இங்கு நிறைந்துள்ளன.
இந்தக் கொரூரங்கள் தொடர்பில் குரல் கொடுக்கும் தைரியம் இலங்கையில் உள்ள திருச்சபைகளுக்கு இல்லாதிருப்பது துரதிஸ்டவசமானது.
நான் எழுதும் இந்தக் கடிதத் கூட இலங்கை அரசின் கோபத்தை மேலும் தூண்டிவிடுமோ நான் அறியேன். ஒருவேளை, என்னைக் கொன்று இதற்காக அவர்கள் பழிதீர்த்துக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியிடம் எங்;களுக்காக மன்றாடுங்கள் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் எழுதப்பட்டு சில நாட்களிலேயே புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆயிரக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுடன் வட்டுவாகல் பாலத்தை தோக்கி அரச படைகளிடம் செல்கிறார் அருட்தந்தை பிரான்சிஸ்.
செல்லும் வழியில் வட்டுவாகல் பாலம் பிணங்களாலும் இரத்தத்தாலும் நிறைந்திருப்பதை அவர்கள் காணுகிறார்கள். இவ்வாறு அருட்தந்தையோடு சென்றவர்களில் போராளிகள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் அரச படைகளிடம் சரணடைகிறார்கள்.
அருட்தந்தை பிரான்ஸ் உடன் சரணடைந்த குறைந்தது 360 பேர் அரச படைகளால் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள்.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அருட்தந்தை உட்பட எவரும் இதுவரை திரும்பவில்லை. காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். சரணடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் உட்பட ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது? என பதிலளிக்குமாறு இலங்கை அரசைக் கோரி 10 வருடங்கள் கடந்தும் போராட்டங்கள் தொடர்கின்றன.
ஆனால் பதில் இல்லை.
90 வயதாகும் மோசஸ் அருளானந்தம் அருட்தந்தை பிரான்சிசுக்கு நெருக்கமானவர். அருட்தந்தை பிரான்சிஸ் குறித்த தகவல் பெற்றுத் தருமாறு நீதிமன்றை நாடியதாக கூறியுள்ளார். ஐ.நா.விடமும் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்மால் முடிந்தழதை நாங்கள் செய்துவிட்டோம். இனி அவரைப் பற்றி கவலைப்படவும் அழவுமே எம்மால் முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை பிரான்சிஸ் பாடசாலை மாணவனாக முதலில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரிக்கு வந்தார். கத்தோலிக்க பாதிரியாராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் புனித பத்திரிசியர் கல்லூரி அதிபரானார்.
தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை வகுப்பறைகளிலும் கல்லூரியிலுமே அவர் செலவிட்டார்.
அவரின் இருப்பிடம் மற்றும் அவரது நிலை தொடர்பில் அறியத்தருமாறு நான் தினமும் கடவுளை மன்றாடுகிறேன் என்கிறார் மோசஸ் அருளானந்தம் அருட்தந்தை பிரான்சிஸ் அரச படைகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தவர். அரச படைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளின் மௌன சாட்சியாக அவர் இன்றும் இருக்கிறார்.
இந்தச் சரணடைவின் முக்கிய சாட்சியாக இருக்கும் பலரில் ஜெயக்குமாரி ஒருவர்.
விடுதலைப்பு புலிகள் இயக்க முக்கிய உறுப்பினராக இருந்த எனது கணவர் கிருஷ்ணகுமாhர் அருட்தந்தை பிரான்சிஸ் உடன் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார் என்கிறார் அவர். எனது கணவர் முதலில் பேருந்தில் ஏற்றப்பட்டார். அதன் பின்னர் பலர் ஏற்றப்பட்டனர். இறுதியாக அருட்தந்தை பிரான்சிஸ் பேருந்தில் ஏற்றப்பட்டார்.
தனது வெள்ளை அங்கிக்கு மரியாதை கொடுப்பார்கள் என அருட்தந்தை பிரான்சிஸ் நம்பினார்.
அருட்தந்தையோடு சரணடைந்தவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என அவர்களைக் கையளித்தவர்களும் கருதினாhர்கள் என ஜெயக்குமாரி கூறியுள்ளார்.
இவர்கள் அனைவரும் காணாமலாக்கப்பட்டுள்ள சம்பவம் இலங்கை இராணுவத்திடம் ஒரே தடவையில் பெருமளவானவர்கள் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவமாக இது உள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவின் முன்னாள் அதிகாரியான ஜன்மின் சுக்கா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றங்களின் ஊமாக நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். சரணடைந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்;. அவர்களை மனிதாபிமானத்துடனும் கொளரவமாகவும்; நடத்த வேண்டும் என்பது மனிதவுரிமைச் சட்டமாகும்.
எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசு தோல்வியடைந்துவிட்டது எனவும் சுக்கா குறிப்பிட்டுள்ளார். ஆனால் தங்களிடம் சரணடைந்த யாரும் கொல்லப்படவில்லை என இலங்கை இராணுவம் மறுக்கிறது.
சரணடைந்தவர்கள் யாரும் இப்போது சிறைகளில் இல்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வேண்டுமெனில் எங்கள் முகாம்களில் வந்து சோதனையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்படியாயின் அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் அவருடன் சரணடைந்த, தனித்தனியாக சரணடைந்த ஆயிரக்கணக்காணவர்கள் எங்கே? என்ற கேள்விக்கு விடையில்லாமல் 10 வருடங்கள் கடந்து சுழல்கிறது காலம்.
தகவல் மூலம் - நன்றி - பி.பி.சி.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: