ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் விடுதலை தொடர்பில் சுட்டிக்காட்டி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கேட்டபோதே தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தை அவமதிக்க குற்றச்சாட்டில் சிறை தண்டனை வழங்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் அரசியல் கைதிகளை விடுக்க முடியாது என்பதே எமது கேள்வியாகும். இதன் மூலம் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதங்கள் கோரிக்கைகளுக்கூடாகவும் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால் ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. இதில் அவர் பாரா முகமாகவே செயற்பட்டார்.
எனவே இது குறித்து பாராளுமன்றத்திலும் நாம் வலியுறுத்துவோம். அத்தோடு ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவர் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும் போது இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.