இலங்கையில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு கிளர்ச்சி செய்ய வேண்டிய தேவைகள் இல்லை என ஜம்இய்யித்துல உலமா சபையின் யாழ் கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவர் மௌலவி எஸ்.சுபியான் தெரிவித்தார்.
ஏனெனில் எமது இனத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க எம்மிடம் பலமான அரசியல் தலைமைகள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.. தற்போது முஸ்லீம் இனத்தின் பெயரால் நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.ஆனால் இந்த தாக்குதல்களுக்கும் முஸ்லீம் சமூகத்துக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.. அரசும், பாதுகாப்பு தரப்பினரும் பல தடவைகள் இதனை கூறியுள்ளனர்.
நாம் ஆரம்ப காலத்தில் இருந்து பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள்.இந்த நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் முஸ்லீம் சமூகத்தினர் காட்டிக் கொடுத்துள்ளனர்.பிடித்தும் கொடுத்துள்ளனர்.இதனை அனைவரும் அறிவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் பூரண சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.எமக்கு தேவையான விடயங்களை நாம் இலங்கை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றோம்.அதிலும் எமது உரிமைகள் சார்ந்த விடயத்தில் குரல் கொடுக்க எம்மிடம் சரியான முஸ்லீம் அரசியல் தலைமைகள் உள்ளனர்.அவர்கள் கடந்த காலங்களில் எமக்காக பல விடயங்களை அரசுடன் பேசி பெற்றுத் தந்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.