ஐயா... ஆர்வக் கோளாறுகளே... இப்படியா செய்வீங்க என்று அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் தர்பார் படக்குழுவினர்.
இந்த படம் ஆரம்பம் ஆனதில் இருந்தே சர்ச்சைதான். படப்பிடிப்பில் எடுக்கப்படும் காட்சிகள் படங்களாக வெளி வந்தன. இப்போது வீடியோவே வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
பேட்ட படத்திறகு பின்னர் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்ற எண்ணத்தில் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க நினைத்து இருந்தாராம் முருகதாஸ். ஆனால் படப்பிடிப்பு நடத்தப்பட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் படப்பிடிப்பில் எடுக்கப்படும் காட்சிகளை படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டனர்.
ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதை மாணவர்கள்தான் செய்தனர் என்று தெரிய வந்தது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விழுந்தது.
படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி நடந்து வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியோ... அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆர்வம் இருக்க வேண்டியதுதான்... அதற்காக இப்படியா செய்வது என்று நொந்து போய் உள்ளனர் படக்குழுவினர்.