கேரளாவில் பருவமழை தொடங்கியதை அடுத்து கன்னியாகுமரி குற்றாலம் உட்பட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சிலவற்றில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாஸ்தலமான குற்றாலம் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி கொட்டுவதால் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் மெயினருவியில் தண்ணீர் மிகவும் வேகமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று முன்தினம் காலையில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால் பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதையடுத்து குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் வெகு வேகமாக கொட்டுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப்பயணிகள் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.