அக்னி நட்சத்திரம் நாளின் போது கூட இப்படி வெயில் அளவு பதிவாகவில்லை. வரலாற்றில் இல்லாத வெப்ப நிலை அளவாக நேற்று டில்லியில் 118.4 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் வெகுவாக சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோடை முடிந்த நிலையிலும் இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி விட்டது. கேரளாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் தலைநகரான டில்லியில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
குறிப்பாக வடக்கு மாநிலங்களில் வெப்பநிலை குறைந்தபாடில்லை. இந்நிலையில் டில்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 118.4 டிகிரி பாரன்ஹிட் (48 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. டில்லி வரலாற்றிலேயே இதுதான் உச்சப்பட்ச வெப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹிட்டிற்கு மேல் வெயில் அடிக்கிறது. வெயில் தாக்கம் குறைய இன்னும் ஒருவார காலம் ஆகும் என சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.