புல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக பாகிஸ்தான் தகவல் அளித்து உள்ளது. இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் டிரால் பகுதியில் மே மாதம் 24-ம் தேதி ஜாகீர்முசா என்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதி புர்கான் வானியின் நெருங்கிய கமாண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு படையினரால் புர்கானி முன்னரே சுட்டு கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜாகீர்முசா கொலைக்கு பழிவாங்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புல்வாமா மாவட்டம் அவந்திவோரா நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனராம். இந்த தகவலை இந்தியாவிற்கு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அந்நாடு இந்த தகவலை கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல் அமெரிக்காவும் புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியாவை எச்சரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் முதல் சந்தேகப்படும் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு பெப்ரவரி14ம் தேதி சம்பவம் போல் மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது என்று இந்தியா தீவிரமாக உள்ளது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.