எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்ஷி நீதிமன்றத்தினுள்ளேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர் வழக்கு விசாரணைக்கு இடையே மயக்கமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற முகம்மது மோர்சிஇ ஹோஸ்னியின் 30 ஆண்டு ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
அந்த சமயத்தில் நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காத காரணத்தால் புரட்சி ஏற்பட்டது.
எகிப்தில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்ற அவர் ஒருவருடத்தின் பின்னர் அங்கு நடைபெற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ராணுவத்தினால் அவர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.
இந்த சமயத்தில் கத்தாருக்காக உளவு பார்த்ததாக மோர்சி மீது குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 2012 டிசம்பரில் போராட்டக்காரர்களைக் கொன்றது தொடர்பாக அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்றையதினம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது அவர் மயக்கமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.