அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை கூடி ஆராய இருந்தது. எனினும் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை.
"முக்கிய விடயங்கள் பேசப்பட இருந்தபடியால் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் நேற்று நாடாளுமன்றம் வந்திருக்க வேண்டும். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் சில உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்கவில்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை. இந்தக் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இதேவேளை பொது எதிரணி, ஜே.வி.பி. ஆகியவற்றின் நாடாளுமன்றக்குழுக் கூட்டங்கள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.