சிறு வயதில் வீட்டில் வெறும் தரையில் படுத்திருந்தால் தாத்தாவோ... பாட்டியே... டேய் வெறும் தரையில் படுக்காதே... ரத்தத்தை உறிஞ்சிடும்... பாய் விரிச்சு போட்டு படு என்று சொல்லியிருப்பார்கள்... உங்கள் நினைவலைகளை சற்றே ஞாபகத்திற்கு கொண்டு வந்து தேடிப்பார்த்தால் இதை நாமே அனுபவித்து இருப்போம்.
தரை என்ன ரத்தம் குடிக்கும் பூச்சியா என்று கிண்டல் கூட செய்திருப்போம்... ஆனால் பெரியவர்கள் பெரியவர்களே... காலத்திற்கு தகுந்த மாதிரி படுக்கைகளை அமைத்து உடல் நலத்தை பேணியுள்ளார்கள். அனுபவ பாடம் கற்றவர்கள் அல்லவா அவர்கள்.
காலத்திற்கு தகுந்தாற்போல்... உடலுக்கு ஏற்றம் கொடுப்பது போல் நம் முன்னோர்கள் படுக்கையை ஏற்படுத்தி கொண்டனர். குளிர்காலம் வந்திடுச்சா... எடும்மா... அந்த கம்பளி படுக்கையை என்று தூசி தட்டி குழந்தைகளை அதில் படுக்க வைப்பார்கள். இதில் அடங்கி இருக்கும் நன்மை என்ன தெரியுமா?
குளிருக்கு இதம் மட்டுமல்ல... குளிர் ஜீரத்தை நீக்கும் தன்மை கம்பளிக்கு இருக்கு. அதனால். இதில் எந்த காலமாக இருந்தாலும் சரி... ஏற்ற ஒரே படுக்கை கோரைப்பாய்தான். இது உடல் சூடு, மந்தம், ஜீரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், நல்ல உறக்கத்தையும் தரும் குணம் கொண்டது. வெறும் தரையில் படுப்பதால் அது சிமெண்டாக இருந்தால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் வெறும் தரையில் படுக்காதே என்று பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள்.
பிரம்பு நாற்காலி, பிரம்பு பாய் ஆகியவை சீதபேதி, சீதளத்தால் வரும் ஜீரத்தை நீக்கும் தன்மை கொண்டவை. அதனால்தான் பிரம்பு நாற்காலிகள் வீட்டுக்கு வீடு கண்டிப்பாக இடம் பிடித்து இருந்தன. இன்று நாம் பிளாஸ்டிக்கிற்கு அடிமையாகி விட்டோம்.
வாத நோய் வந்தவர்களை ஈச்சம்பாயில் படுக்க வைங்கப்பா... என்பார்கள். ஈச்சம்பாய்க்கு வாதநோயை குணமாக்கும் தன்மை உண்டு. உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும். மூங்கில் பாயில் படுக்காதே... என்று எச்சரிப்பார்கள். இதுவும் உடல் சூட்டையும், பித்தத்தையும் அதிகரிக்கும். தாழம்பாய்... இன்று இவை கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகை பாய்க்கு வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும் தன்மை உண்டு.
தற்போது அனைவரின் வீட்டிலும் பாய் இருக்கிறதோ இல்லையோ... நிச்சயம் இலவம்பஞ்சு மெத்தை இடம் பிடித்து விட்டது. இந்த இலவம் பஞ்சு உடலில் ரத்தம், தாது பலம் பெற செய்யும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் இதனால் நிவாரணம் பெறும். இப்படி வகையறிந்து நம் முன்னோர்கள் படுக்கைகளை பயன்படுத்தினர்.
இன்று குஷன் என்ற பெயரில் தயாராகும் மெத்தைகள் உடலுக்கு நன்மையை தருவதில்லை. பத்தமடை பாயை விரித்து போட்டு படுத்தா... அடடா சுகமோ... சுகம்... அந்த தூக்கம் பஞ்சு மெத்தையில் கூட கிடைக்காதுப்பா... என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள். அது உண்மையிலும் உண்மைதான்.