இந்தியா ஆன்மீகத்திற்கு என்று தனி சிறப்பு பெற்ற நாடு. அதிலும் தமிழ்நாடு இதில் மிகவும் சிறந்து விளங்குகிறது. திரும்பும் இடமெல்லாம் வானுயர்ந்த கோபுரங்கள் சூழ்ந்த நகரங்கள்தான்.
அதிலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட திருத்தலங்கள் அதிகம் உள்ளன. அந்த வகையில் சித்திரை 1ம் தேதி சூரியனின் ஒளிக்கதிர்கள் தேடி வந்து சுவாமியை தரிசனம் செய்யும் நிகழ்வு கொண்ட கோயில் உள்ளது என்பது தெரியுங்களா?
சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கோயில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் தேனீஸ்வரரை தழுவி பாதங்களை வணங்கிச் செல்லும் அற்புத நிகழ்வுதான் அது. இது நடப்பது தமிழகத்தில் தொழில் நகர் என்று சிறப்பு பெற்ற கோயம்புத்தூருக்கு அருகே உள்ள வெள்ளலூரில் உள்ள தேனீஸ்வர சுவாமி கோயிலில்தான்.
இந்த நிகழ்வு ஆண்டு தோறும் தவறாது எப்படி நடக்கிறது. கால நிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த நிகழ்வு மட்டும் தவறாது நடக்கும் இதை கண்டு ஆராய்ச்சியாளர்களுக்கே ஆச்சரியம்தான். இது யாராலும் கணிக்க முடியாத இயற்கையின் அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.
தொழில் நகராக பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் கோயம்புத்தூரின் பெருமையை இன்னும் உயர்த்துவதுதான் இந்த நிகழ்வு. கோயம்புத்தூருக்கு தென்கிழக்கே 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெள்ளலூர் தேனீஸ்வரசுவாமி கோயில்.
ஆராய்ச்சியாளர்களின் பல்வேறு ஆய்வுகள் இன்றும் நடந்தாலும் இந்த தேனீஸ்வரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த சூரிய வணக்கம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இவ்வூருக்கு கொங்குநாட்டு அன்னதானசிவபுரி அக்ரஹார வெள்ளலூர் என்றும், அதிராசரசர் சதுர்வேதிமங்களம், தென்னூர், தேனூர் எனும் பல பெயர்கள் பல காலகட்டத்தில் இருந்து வந்துள்ளது. இந்த நகரம் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்படும் இடமாக உள்ளது. காரணம் கோயம்புத்தூருக்கு முன்பே வர்த்தக நகரமாக இந்த ஊர் விளங்கியதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளதாம்.
கி.மு 44-ம் ஆண்டு ரோம் நகரத்து அணிகலன்கள், செப்பு தகடுகள், மன்னர் காலத்து செப்பு காசுகள் என்று பல அரிய பொருட்கள் மத்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அருங்காட்சியகத்தில் உள்ளது, 2000ம் ஆண்டு தொன்மையானது இக்கோயில் என்பதும் குறிப்பிடத்தக்கது. கரிகால சோழ மன்னர் இந்த கோயிலுக்கும் திருப்பணிகள் செய்துள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தமிழ் புத்தாண்டு தொடக்கமான சித்திரை 1-ம் தேதி சூரியனின் ஒளிக்கதிர்கள் கோயில் உள்ளே கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் தேனீஸ்வர லிங்கத்தை தழுவி வணங்கி செல்லும் அரிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதுமட்டுமல்ல... இக்கோயிலில் பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளன. சிலைகள் உளியால் செதுக்கிதானே உருவாக்குவார்கள்.
ஆனால் இக்கோயிலில் உளி கொண்டு செதுக்காத விநாயகர் சிலையும், நந்தி பஞ்சலிங்கம் போன்ற வெண்கற்களால் கையால் தேய்த்தே உருவாக்கப்பட்ட விக்கிரகங்களும் இருப்பது மிகவும் உள்ளது. இது 1843-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றபோது பூமிக்கு அடியில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய சந்திரர்களுக்கு தனித்தனி கோயில், நவக்கிரகங்கள் சனி பகவானுக்கும் தனி கோயில் இங்கு உள்ளது.
வன்னிமரம் தல விருட்சமாக உள்ளது. இதில் ஆண் – பெண் மரம் இரண்டும் இருப்பது விசேஷம். தேவலோக காமதேனு இந்த ஈசனை வழிபட்டதாகவும் அதனால் தேவ + ஈஸ்வரன் தேனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
அன்னை சிவகாமசுந்தரி வடக்குப் பக்கம் நிறை கோலத்தில் காட்சியளிக்கிறார். சூரியனின் இந்த வணக்கம் செலுத்தும் நிகழ்வை காண சித்திரை 1ம் தேதி திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: