ஒரு காலத்தில் சிறப்புமிக்க வீட்டுத் தோட்டத்தை பார்த்துப் பார்த்துப் பதியம் போட்டு, நம் பெற்றோரின் விரல் பிடித்து, அந்தத் தோட்ட மண் புழுதியை பாதங்களில் அப்பித் திரிந்தவர்கள், இன்றைய காலச்சூழல், நம்மைக் கொஞ்சம் வேகமாக இயக்குவதால், அதனை நாம் கொஞ்சம் மறந்திருக்கலாம்.
வீட்டைச் சுற்றித் தோட்டம் போடுவது பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல... அது சுத்தமான காற்றைத் தரும், வீட்டுக்கு அழகைத் தரும், மனதுக்கு அமைதியைத் தரும், நல்ல உடற்பயிற்சியாக அமையும். அதுவும் காய்கறித் தோட்டம் இருந்தால், வீட்டு செலவில் காய்கறிச் செலவை மட்டுப்படுத்தும் அழகான ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பு, அதில் அம்சமான ஒரு தோட்டம் போடுவதைப் பற்றியும் யோசித்தால்தான் அந்த அழகான வீடு, முழுமையான வீடாக அமையும்.
தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம்.
வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் பாத்திரங்களில், மிளகாய் ,வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.
சிறிய தொட்டிகளில் பசளி ,வல்லாரை, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்கலாம்.. அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள். ஒரு சில குரோட்டன்ஸ் செடிகளுக்கு தினமும் சூரிய வெளிச்சம் தேவைப்படாது. வீட்டிற்குள்ளேயே வைக்கலாம். வாரத்தில் ஒரு சில நாட்களுக்கு மட்டும் அவற்றை வெளியே வைத்துவிட்டால் போதும். வீட்டிற்கும் அழகு சேர்க்கும்.
நீற்கள் வளர்க்கும் தோட்டத்தில் ஒரு பூவோ அல்லது காயோ காய்த்து விட்டால் அதைப்பார்க்க பார்க்க எவ்வளவு ஆனந்தம்.
சிறிய சிறிய மலர்ச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்.
மேலும் மருத்துவக் குணங்கள் கொண்ட கற்பூரவள்ளிச் செடி, துளசி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வேம்பு போன்றவற்றை வளர்ப்பதால் பலருக்கும் பலனளிக்கும் வகையில் அமையும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நிச்சயம் இருக்க வேண்டிய செடிகள் இவை.
கடுகு, வெந்தயம், சோம்பு , கொத்துமல்லி ஆகிய விதைகளை தூவி அந்த செடிகளில் இருந்து பெறும் இலைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
செடிகளைக் காக்க பல்வேறு கை மருந்துகளையும் நீங்கள் உபயோகித்தாக வேண்டும். பூச்செடிகளுக்கு தேயிலை சக்கை , அவங்காயத்தோல், முட்டை ஓடுகளைப் போட்டு பராமரிக்கலாம்.