பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த செலவில் சட்டக் கல்வி கற்க புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயலினால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டத்திற்குட்பட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இவ்வாறு கஜா புயலால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களில் மறுசீரமைப்புப் பணிக்கள் ரூ. 200 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கிராமப்புறங்களில் தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே நடப்பாண்டில் 10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
ஆண்டுதோறும் சட்டக் கல்வி பயில்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் குறைந்த செலவில் சட்டக் கல்வியை கற்க ஏதுவாக புதிதாக 3 அரசு சட்டக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்.
இதற்காக தலா 3 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் வீதம், மொத்தம் 9 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் செலவில், 2019-2020 கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக, ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.