முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்டு தனியார் வீடு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று 11.07.19 அன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 27 ஆம் திகதி முதல் பொலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டு வந்த நிலையில் 11.07.19 அன்று அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாகவைத்து குறித்த பகுதியில் அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர், கிராமசேவையாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படைஅதிகாரிகள்,பொலீசார் ஆகியோர் முன்னிலையில் குறித்த பகுதி தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அதனை மூடிவிட்டு சென்றுள்ளார்கள்.