ஒரு தேநீரின் விலை எவ்வளவு இருக்கும்...? பெரிய ஸ்டார் ஹோட்டலில் என்றால் ரூ.500 வரை இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் ஒரு கப் தேநீரின் விலை ரூ.13,800 என்றால் மயக்கம் வருகிறது அல்லவா. இது இங்கிலாந்தில்தான்.
இங்கிலாந்தில் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே அமைந்துள்ள ஹோட்டலில்தான் இந்த விலை. ஒரு கப் தேநீர் 200 டாலர் மதிப்பு. இந்திய ரூபாயில் 13 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த டீயில்.
பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே அமைந்துள்ளது தி ரூபென்ஸ் ஹோட்டல். இங்குதான் அந்த விலை அதிகமான டீ விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் கோல்டன் டிப்ஸ் என்ற நிறுவனம் இலங்கையில் இருந்து மிகவும் தரமான, சிறப்பான முறையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளை பெறுகிறது.
இந்த தேயிலைகள் வெல்வெட் துணியில் மட்டும்தான் உலர்த்தப்படுகின்றன. இப்படி தயாராகும் தேயிலைதான் இந்த ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னொரு விடயம். இந்த தேயிலை வேறு எந்த ஹோட்டலுக்கும் அளிக்கப்படுவதில்லை என்பதுதான். மிகவும் பிரத்தியேகமாக இந்த ஹோட்டலுக்கு மட்டுமே இந்த தேயிலைகள் அனுப்பப்படுவதால்தான் தேநீரின் விலை இப்படி உச்சத்தில் உள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு என்றால் பக்கிங்காம் அரண்மனையின் அழகை ரசித்தப்படி ஹோட்டலுக்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு இந்த தேநீர் வெள்ளிப் பாத்திரத்தில் பரிமாறப்படுகிறது என்பதுதான்.