Tuesday 23rd of April 2024 09:39:34 AM GMT

LANGUAGE - TAMIL
நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பிலான சந்திப்பும் அறிவிப்பும் (காணொளி)

நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பிலான சந்திப்பும் அறிவிப்பும் (காணொளி)


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில் யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய போதே திருவிழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் விளக்கமளித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், நல்லூர் ஆலய பிரதிநிதிகள், இந்து மதப் பெரியார்கள், யாழ். மாநகர ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உதவிப் பிரதேச செயலாளர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை அதிகாரிகள், யாழ். மாநகர சபை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் சங்கம், பொது அமைப்புக்கள், தொண்டர் சேவையில் ஈடுபடவுள்ள அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சுற்றாடலில் வதிகின்ற – தண்ணீர்ப்பந்தல் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாலில் அறிவிக்கப்பட்டுள்ள நல்லூர் ஆலயப் திருவிழா ஏற்பாடுகள் வருமாறு :

வழமை போல, இம்முறையும் நல்லூர் உற்சவ காலத்தில் தேவையான பொது, சுகாதார, போக்குவரத்து ஏற்பாடுகளை மாநகரசபை செயற்படுத்தவுள்ளது. உற்சவ காலத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்களின் நலன் கருதி ஆலய வீதிகளுக்கு மணல் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீதித் தடைக்குள் - ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் பகுதிகளினுள் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

வீதித்தடைகளினுள் வதிகின்றவர்களுக்கான உள்நுழைவு அனுமதி அந்ததந்தப் பகுதி கிராம சேவையாளர்களின் பதிவின் பிரகாரம், பிரதேச செயலக மற்றும் மாநகர சபை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும். இவை தவிர ஆலய நிர்வாகத்தினரால் ஆனுமதிக்கப்படுபவர்களுக்கும், மாநகர சபை உறுப்பினர்களுக்கும் வீதித் தடைகளின் ஊடாகப் பயணிப்பதற்கான உள்நுழைவு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன. வழமையான இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும். தேசிய பாதுகாப்புக் கருதி பொலீசாரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய வீதித்தடைகளில் பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆலயப் பிரதேசத்தினுள் அடங்கும் பருத்தித்துறை வீதி, கோவில் வீதிகளுக்கான மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுப் போக்குவரத்து மார்க்கங்கள் மாற்றியமைக்கப்படும்.

இம்முறை ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களை மேற்கொள்வதற்காக வருகின்ற காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன் வீதி – பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

காவடிகள் வருகின்ற முன் வீதி தவிர்ந்த ஏனைய பக்கங்களின் வழமையை விட சற்றுத் தள்ளி கடைகள் அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.

ஏப்ரல் 21 (ஈஸ்டர்) தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொலீஸ் தலைமை அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பொலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE