எமது இளைஞர்களை பலியெடுக்கும் அவசரகால சட்டத்திற்கு எதிராகவே நாம் நாடாமன்றில் செயற்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் பொலிசார் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இதேபோன்று பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற சூழல் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியன உள்ள நிலையில் எதிர்வரும் அமர்வுகளில் அவற்றுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுமா என வினவியபோது, எமது இளைஞர்களை பலியெடுக்கும் அவசரகால சட்டத்திற்கு எதிராகவே நாம் நாடாளுமன்றில் செயற்படுவோம் என அவர் தெரிவித்தார். குறித்த சட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை. அவ்வாறான சட்டம் நாடாளுமன்றிற்கு கொண்டுவரப்பட்டபோது நான் அது தொடர்பில் ஓர் விடயத்தை சுட்டிக்காட்ட முற்பட்டேன். ஆனாலும் சபாநாயகர் அதை ஏற்கவில்லை எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அதன் விளைவுகளை இன்றுநாம் எதிர்கொள்கின்றோம். அவ்வாறான சட்டம் நீடிப்புக்காக கொண்டுவரப்படும்போது அதற்கு எதிராக செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார். ஆவா படை உள்ளிட்டவை அரச படைகளின் ஒத்துழைப்புடனேயே செயற்படுகின்றமை தொடர்பிலும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசியல் கைதிகள் விடயம் உள்ளிட்டவை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.