அத்திவரதர் தரிசனம் வரும் 16 ஆம் திகதி இரவு அல்லது மறுநாள் அதிகாலையுடன் நிறைவுக்கு வரும் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் ஆனந்தபுஷ்கரணி தீர்த்தத்தில் மூலவரான வரதராஜப் பெருமாள் மூழ்கியுள்ளார். 40 வருடங்களுக்கு ஒருமுறையே இவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
வரதராஜப் பெருமாளை தரிசிப்பதற்காக பல இடங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அலை மோதுவது வழமை. இவ்வாண்டு கடந்த முதலாம் திகதிதொடக்கம் அத்திவரதர் பக்தர்களின் தரிசனத்துக்காக எழுந்தருளினார்.
அத்திவரதரை தரிசிப்பதற்காக பல இலட்சம் மக்கள் குழுமினர். இந்நிலையில் மீண்டும் அத்திவரதர் குளத்துக்குள் மூழ்கவுள்ளார். இதற்கான ஆகம சடங்குகள் வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இதனால் 16 ஆம் திகதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுக்கு வருகிறது என காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
மேலும், இதுவரை 70 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அத்திவரதரை நேரடியாக தரிசனம் செய்து சென்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.