அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் கழிவறையில் இரகசிய கமரா பொருத்திய மலேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் டெய்கொவிலிருந்து ஹாஸ்டன் வரை சென்றுகொண்டிருந்த யூனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில், ஒரு பெண் பயணி ஒருவர் கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது கழிவறையின் உள்ளே ஒரு ஓரத்தில் ஒரு வித்தியாசமான கருவி தென்பட்டுள்ளது. அந்த கருவியில் ஒரு புள்ளி அளவிலான ஒளி விட்டு-விட்டு எரிந்துள்ளது. சந்தேகப்பட்ட பெண் பயணி, அந்த கருவியை கைப்பற்றி விமான ஊழியர்களிடம் கொடுத்துள்ளார்.
ஹாஸ்டனில் விமானம் தரையிரங்கியவுடன், விமான நிறுவனத்தினர் அந்த கருவியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த கருவியை ஆராய்ந்த பொலிஸார் அது ஒரு படம்பிடிக்கும் கமரா என்று கண்டறிந்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட விமான பயணிகள் அதிர்ந்து போயினர்.
உடனே அந்த இரகசிய கமராவை ஆய்வு செய்த அதிகாரிகள், கடந்த மே 5 ஆம் திகதி அதே விமானத்தில் பயணித்த, சூன் பிங் லீ என்ற மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தான், கழிவறையில் கமராவை பொருத்தியதாக கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து இவ்வாரம் அவரை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர். அவருக்கு 12 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.