கனடாவில் இடம்பெற்ற முக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு இளைஞர்களும் துப்பாக்கியால் தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கில்லம் பகுதியில் மீட்கப்பட்ட இரு உடல்களும் முக்கொலையுடன் தொடர்புடையவர்களெனத் தேடப்பட்டு வந்த 19 வயதான கெம் மெக்லியோட் மற்றும் 18 வயதான பிரையர் ஷ்மேகெல்ஸ்கி ஆகியோருடையவைதான் என உறுதியாகியுள்ளது.
மானிட்டோபா வடக்கு சட்டமருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட பிரேத பரிசேதனையின் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இருவரும் சடலங்களாக அடையாளம் காணப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனினும் அவர்கள் எப்போது இறந்தார்கள் என்பதை மிகச் சரியாகக் கூறமுடியாதுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கு அருகில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டது. இந்தத் துப்பாக்கியாலேயே இரண்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதியவர் ஆகியோரை இளைஞர்கள் சுட்டுள்ளமை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, முக்கொலைச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் தலைமறைவாகிய இரு இளைஞர்களும் கில்லம் பகுதியில் பல நாட்களுக்கு மறைந்து வாழ்ந்து வந்துள்ளமையும் உறுதியாகியுள்ளது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.