திருகோணமலைமாவட்டம் அலஸ்தோட்டம் பகுதியில் கடந்த இரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து விபத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் உட்பட்ட ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர். அதனால் அங்கு திரண்ட மக்கள் காரை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரவு 7.30 மணியளவில் அதி வேகமாக வந்த கார் மோட்டார் வண்டி மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதுடன் அந்தப்பகுதியில் இருந்த கடை ஒன்றுக்குள்ளும் புகுந்துள்ளது.
சம்பவத்தில் குழந்தை ஒன்று, பெண்கள் இருவர் உள்ளடங்கலாக ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காரைச் செலுத்திவந்த நபர் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காருக்குத் தீவைத்துக் கொழுத்தியுள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும் கார் முற்றாக எரிந்தழிந்திருப்பதாக தெரியவருகிறது.
இதனிடையே காரைச் செலுத்திவந்த நபர் சிங்களவர் என்பதாலும் விபத்து இடம்பெற்ற பகுதி தமிழ்மக்கள் செறிந்துவாழும் பகுதி என்பதாலும் கடந்த நள்ளிரவு வரை அங்கு பதற்றமான சூழல் நிலவியதாக தெரியவருகிறது.