மனுஸ் மற்றும் நவுரு தீவில் அமைந்திருக்கும் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை கனடாவில் குடியேற்ற சிரிய அகதி ஹசன் அல் கோண்டர் அறிமுகப்படுத்திய திட்டத்திற்கு அவுஸ்திரேலியர்கள் ஒரு இலட்சம் டொலர்களுக்கு மேல் நிதி வழங்கியுள்ளனர்.
ஹசன் அல் கோண்டர் என்ற சிரிய அகதி கனடாவில் தஞ்சம் வழங்கப்படும் முன், ஏழு மாத காலம் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்தார். பின்னர், கனடாவில் அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டு அங்கு குடியேறினார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கை காரணமாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உதவும் விதமாக 'ஒப்ரேஷன் நொட் போர்கொட்டன்' (Operation R+Not Forgotten) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் அந்த அகதி.
இதன் மூலம் இலங்கையர்கள் உட்பட அவுதிரேலியாவில் உள்ள 250 வரையான அகதிகளை கனடாவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு அகதிக்கும் 18,400 டொலர்கள் என 3.68 மில்லியன் டொலர்களை திரட்டும் நோக்கத்தில் நிதி சேகரிக்கும் பணி நடந்து வருகின்றது.
தற்போதைய நிலையில் 174,00 டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 111,000 டொலர்கள் ஆஸ்திரேலியர்களால் வழங்கப்பட்டுள்ளது என சிரிய அகதியான அல் கோண்டர் தெரிவித்திருக்கிறார்.
இந்த முன்னெடுப்பை அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வசிக்கும் இலங்கை அகதியான சமிந்தா கணபதி வரவேற்றுள்ளார்.
எந்த நம்பிக்கையுமின்றி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சிக்கியிருக்கிறோம். மனுஸ்தீவில் உள்ள பெரும்பாலான அகதிகள் அவுஸ்திரேலிய மீள்குடியேற்ற திட்டத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள் எனக் கூறியிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் தடுப்பு கொள்கைகள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பானவை எனக் கூறியுள்ள சிரிய அகதி அல் கோண்டர், தனது நோக்கம் அரசாங்கத்தை பகிரங்கமாக அவமானப்படுத்துவது அல்ல எனத் தெரிவித்திருக்கிறார்.
இப்பிரச்னையை முடிவிற்கு கொண்டு வர அரசியல் ரீதியாக அல்லாமல் மனிதாபிமான ரீதியாக பணியாற்றுவோம் என சிரிய அகதி அழைப்பு விடுத்திருக்கிறார்.
படம்: கனடா செல்ல உதவிய பெண்ணுடன் சிரிய அகதி ஹசன் அல் கோண்டர்