ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றின் பெயரையும் அதன் சின்னத்தையும் வேட்பாளர் ஒருவர் பயன்படுத்துவதற்கு 50 தொடக்கம் 60 இலட்சம் ரூபா வரை பெறப்படுகிறது என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட விரும்பினால், அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஒன்றில் போட்டியிட வேண்டும்.
இலங்கையில் தற்போது, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யபட்ட கட்சிகள் 70 உள்ளன. எனினும் இவற்றில் சில அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. பதிவுகளை மட்டுமே கொண்டுள்ளன.
இந்நிலையில் பல சுயேட்சை வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள். கட்சியையும் கட்சிச் சின்னத்தையும் பயன்படுத்துவதற்காக மட்டும் 50 தொடக்கம் 60 இலட்சம் ரூபாவை கேட்கப்படுகிறதாம் என அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.