தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என எழுத்து மூலமான உறுதிமொழியை தருபவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை ஏற்க முடியாது. அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நினைப்பது முட்டாள்தனமானது என சாடியிருக்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி.
யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விவாதம் தேவை இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் நடைபெற்ற அனுபவங்களை மையமாக வைத்து தமிழ் மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னிப் போரில் ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
அந்த போரை முன்னின்று நடத்திய அப்போதைய இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த தேர்தலில் ஆதரவு வழங்கியமையை தமிழ் மக்கள் மறக்கவும் மாட்டார்கள் - மன்னிக்கவும் மாட்டார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி தீர்வு தருவார் என கூட்டமைப்பினர் கூறித் திரிகின்றனர். இதனை முட்டாள்தனம் என்பதா அல்லது என்னவென்று கூறுவது என்று தெரியவில்லை. ஏனெனில் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட போது பாராளுமனறத்தில் அதனை தீயிட்டுக் கொளுத்தியவர்களே இவர்கள்தான் ரணிலின் நரித்தனம் இப்போது அரசியலுக்கு வந்துள்ள கூட்டமைப்பின் பேச்சாளருக்கு புரியாது.
நான் 40 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கின்றேன். நான் அரசியலில் ஈடுபட்ட காலத்தில் சுமந்திரன் பிறந்தே இருக்க மாட்டார். ஆனால் நாம் ரணிலின் நரித்தனத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே அறிந்து வைத்திருக்கின்றோம்.
இவ்வாறு தென்னிலங்கை கட்சிகளின் குணங்கள் இருக்கும் போது நாம் நிதானித்து சரியான தெரிவுகளை முன்னெடுக்க வேண்டும்.எமது பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என எழுத்தில் தந்தால் ஆதரவு கொடுக்கலாம் என நினைப்பது அடி முட்டாள்தனம் என்றே கூற வேண்டும் - என்றார்.