கரியமில வாயு பூமியின் கடல்சார், புவிசார் சுற்றுச்சூழலை நாசம் செய்வது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
கிரையோஸ்பியர் என்று அழைக்கப்படும் பூமியின் உறைபனி மண்டலங்கள் மற்றும் கடல்கள் பற்றிய சிறப்பு ஆய்வை மேற்கொண்ட ஐ.நா. சர்வதேச வானிலை மாற்றக் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வட துருவத்தில் மேற்பரப்பில் கிடக்கும் உறைபனியில் குறைந்தது 30 வீதம் இந்த நூற்றாண்டு இறுதியில் உருகிவிடும் அபாயம் உள்ளது.
அதில் அடைந்திருக்கும் கரியமில வாயு பில்லியன் தொன்கள் கணக்கில் வெளியேறும் போது புவி வெப்பமடைதல் அதிகரிக்கும். இதனால் நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை கை மீறி சென்று விடும் எனவும் அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
900 பக்கங்களைக் கொண்ட இந்த விஞ்ஞான மதிப்பீடு ஓராண்டுக்குள் நான்காவது முறையாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் காடுகளைக் காப்பது, உலக உணவு அமைப்பு முறைகளை நிர்வகிப்பது ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மனிதன் இந்தப் பூமியில் வாழும் வாழ்க்கை முறை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறது இந்த அறிக்கை.
2050ம் ஆண்டளவில் கடல்மட்டத்துக்குக் கீழ் இருக்கும் பெருநகரங்கள், சிறுதீவு நாடுகள் பெரிய அளவிலான கடல்நீர் மட்டம் உயர்வதால் உருவாகும் அசம்பாவிதங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த அறிக்கை.
புவிவெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க உலக நாடுகள் முயற்சி செய்தாலும் கடல் நீர்மட்ட அதிகரிப்பு சுமார் 25 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து புலம்பெயர்தலை நிகழ்த்தும்.
100மில்லியனோ, 50 மில்லியனோ வெளியேறும் மக்கள் தொகையில் எண்ணிக்கை முக்கியமல்ல, ஆனால் மானுட துயரத்தை இவை கடுமையாக அதிகரிக்கும் என்கிறார் முன்னணி விஞ்ஞானி பென் ஸ்ட்ராஸ்.
அரசியல் குழப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகாளல் சிறிய அளவில் இப்போது மக்கள் புலம்பெயர்கின்றனர்.
ஆனால் கடல்நீர்மட்டம் அதிகரிப்பினால் பலகோடி மக்களின் நிலங்களை கடல் தின்று விடும். இதன்போது ஏற்படும் புலம் பெயரும் மக்கள் தொகையை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது எனவும் பென் ஸ்ட்ராஸ் எச்சரித்துள்ளார்.