Friday 29th of March 2024 05:11:14 AM GMT

LANGUAGE - TAMIL
வவுனியாவில் வாங்கிக் கட்டிய வரதர்: என்ன நடந்தது – இனி என்ன? - நிர்மலன்

வவுனியாவில் வாங்கிக் கட்டிய வரதர்: என்ன நடந்தது – இனி என்ன? - நிர்மலன்


சர்வதேச விசாரணை நடக்கப் போவதில்லை. எனவே போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கோத்தாபாயாவை தமிழ் மக்கள் ஆதரித்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற வரதராஜப் பெருமாளின் கூற்று அரசியல் உளவியல் சார்ந்த விவகாரமாக மாறியுள்ளது.

சர்வதேச விசாரணை நடக்கப் போவதில்லை. அதனை இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் விரும்பாது. எனவே ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்க தமிழ் மக்கள் கோத்தாபாய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும்; என முன்னாள் வடகிழக்கு மாகாண முதல்வரும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியி;ன் செயலாளர் நாயகமுமாகிய வரதராஜப் பெருமாளின் கூற்றினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வெகுண்டெழுந்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள்.

வவுனியாவுக்கு விஜயம் செய்த வரதராஜப் பெருமாள் செய்தியாளர்களைச் சந்தித்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துரைத்தபோது காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லை என்பது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கான இழப்பீட்டை சீராக வழங்க கோத்தாபாயா தரப்பினர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சர்வதேச விசாரணை எதுவும் நடக்கப் போவதில்லை. அதனை இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் விரும்பமாட்டாது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலின் மூலம் இந்த நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி, அந்தத் தேவையை நிறைவேற்ற கோத்தாபாயாவுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டமைக்கான பொறுப்பு கூற வேண்டும். அதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு தருணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டே அவர்களுடைய உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ள வரதராஜப் பெருமாளின் கூற்று, அவர்களை சீற்றம் கொள்ளச் செய்துள்ளது.

கோத்தாபாய ராஜபக்சவை ஏன் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கேள்வியில் கோத்தாவின் கடந்த காலம் பற்றிய விவாதங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட, மகிந்த ராஜபக்ச அவரை வேட்பாளராக நியமித்திருப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வரதராஜப் பெருமாள் சுட்டிக்காட்டி இருந்தார்.

கோத்தாபாய ராஜபக்ச செயற்திறமை உள்ளவர். மாற்றங்களை ஏற்படுத்த வல்லவர் என்ற ரீதியில் பல்வேறு விடயங்களுக்காக அவரைத் தமிழ் மக்கள் ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

செய்தியாளர்களுடனான சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஏ9 வீதியில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி 930 நாட்களாக வீதியோரத்தில் தொடர்சசியாகப் போராடி வருபவர்களை அவர் சென்று பார்வையிடவில்லை. அவர்களுடைய நிலைமைகளைக் கேட்டறியவில்லை. அவர்களுடைய உணர்வுகளை நேரடியாக அவர் கண்டறியவுமில்லை.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டே, காணாமல் போயுள்ளவர்களின் இரத்த உறவினர்கள் போலியாக வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற போக்கில் அவர் தொனி செய்துள்ளமை அவர்களை வெகுண்டெழச் செய்துள்ளது.

தமது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கியமைக்கு பொறுப்பு கூற வேண்டும். தமது உறவுகளை வேண்டுமென்றே காணாமல் ஆக்கிய பாரதூரமான குற்றச் செயலைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உறவுகளைக் காணாமல் ஆக்கியதன் மூலம் தமக்கு ஏற்பட்டுள்ள உளவியல் ரீதியான பாதிப்புக்கு நீதி வழங்க வேண்டும். வலிந்து காணாமல் ஆட்களைக் காணாமல் ஆக்கிய குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற உணர்வுகளுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர்.

குடும்பப் பாசப் பிணைப்புடன் கூடிய மென்னுணர்வு சார்ந்த இந்த விடயத்தில் வெறுமனே அரசியல் இயந்திர மயம் சார்ந்த மேலோங்கிய மேதாவித்தனப் போக்கில் வரதராஜப் பெருமாள் வெளியிட்டுள்ள கருத்துக்கள், பாதிக்கப்பட்டவர்களை தீயினால் சுட்ட நிலைமைக்கு ஆளாக்கி விட்டுள்ளதைக் காண முடிகின்றது.

காரணங்களின்றி தங்களது இரத்த உறவுகளைக் காணாமல் ஆக்கிய கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக அவர் குரல் எழுப்பியுள்ளதாகவே அவர்கள் கருதுகின்றார்கள். அத்துடன் அந்த குற்றச் செயலுக்குப் பின்னணியில் காரணமாக இருந்தவரை ஆதரித்து, அவருக்குத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று வரதராஜப் பெருமாள் பச்சையாகவே வேண்டுகோள் விடுத்துள்ளதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

வரதராஜப் பெருமாளின் முக உருவத்தைத் தாங்கிய சித்திர உருவத்தைக் கொண்ட பதாதையைத் தூக்கி, சாணம் கலந்த நீரை அபிஷேகம் செய்து துடைப்பத்தினால் அடித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார் ஆற்ற முடியாத தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறி நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் நடைபெற்று வருகின்ற போராட்டம் ஆயிரமாவது தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்;டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்களும் இதனையே கூறி வருகின்றார்கள். இழப்பீடு தருகிறோம். அதனைப் பெற்றுக் கொண்டு, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தைக் கைவிட்டு மறந்துவிடுங்கள் என்பது அவர்களுடைய நிலைப்பாடு.

இரத்த உறவினர்களான பிள்ளைகள் உள்ளிட்ட தமது குடும்பங்களுக்கு ஆதாரமான கணவன்மார். தாய் தந்தையரும்கூட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், அவர்கள் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருப்பதற்கும் தங்களில் பலரிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள். எனவே, அவர்களைத் திருப்பித் தரவேண்டும். ஆட்கள் காணாமல் போயுள்ளமைக்கு இழப்பீடு கோரவில்லை. அந்த குற்றச் செயலுக்கு பொறுப்பு கூறி நீதி வழங்க வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. அதுவே அவர்களுடைய நிலைப்பாடு.

இத்தகைய முரண்பாட்டிற்கு இடையில் அரச தரப்பினராகிய போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய செயற்பாட்டை நியாயப்படுத்துகின்ற போக்கிலுமே வரதருடைய கருத்துக்கள் வெளியாகி உள்ளன என்பது பாதிக்கப்பட்டவர்களின் கருத்து.

இது குறித்து, வரதராஜப் பெருமாளின் கூற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கடுமையான கண்டனச் செயற்பாட்டின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தினால் அறிக்கை யொன்றும் வெளியிடப்பட்டது.

வவுரதராஜப் பெருமாளுக்கான செய்தி என்று குறிப்பிட்டு ஊடகங்களுக்கு வாசிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தமது விடயத்தில் அவர் தலையிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உளவுக்குழு வரதர் போர்க்குற்ற விசாரணை குறித்து பயப்படுகின்றார். ஏனெனில் அவரும் அவரது நண்பர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதால் சர்வதேச நீதிமன்ற சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபாயாவின் கீழ் சுமார் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். எந்தத் தமிழர்களும் கொலையாளிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள். வரதர் கொலையாளிகளுக்கு வாக்களிப்பார்கள் என நினைப்பது ஒரு முட்டாள்தனம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கருத்துரைத்த வரதருக்கு தமிழ் மக்களிடம் இருந்து எந்தவித ஆணையுமில்லை. எந்தவொரு தேர்தலிலும் ஆயிரம் தமிழ் வாக்குகளைக் கூட அவர் பெற முடியாது. எண்பதுகளின் பிற்பகுதியில் உலகின் நான்காவது சக்தியாகிய இந்தியா ஒரு கூட்டாட்சிக் கருத்தை அமுல்படுத்துவதற்கு அதை நிரந்தர அரசியல் தீர்வாக மாற்றுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்திய இராணுவத்தின் உதவியுடன் அவரால் எதனையும் செய்ய முடியவில்லை. இது அவரது தலைமைத் தோல்வி என்பதைக் காட்டுகின்றது என போராட்டக்காரர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், தோல்வியுற்ற எந்தவொரு தலைமைக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் எதையும் சொல்வதற்கும் அருகதை இல்லை. வரதருடைய குடும்பத்தினர் எவரும் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனரா? இல்லை. எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு அல்லது அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு அறிவுரை வழங்க அவருக்குத் தகுதி இல்லை. அரசியல் வாய்ப்பு கிடைத்தபோது துரோகம் செய்தனர். இந்த முட்டாள்கள் நம் தமிழ் அரசியலில் ஒரு பகுதியாக இருக்கக் கூடாது. வரதருக்குச் சிறந்த இடம் ஒரிசா. அவர் ஒரிசாவுக்கே திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கண்டனச் செயற்பாட்டின்போது ஆற்ற முடியாது சீற்றத்தில் கண்ணீர் சிந்திய பெண்களும் கருத்து வெளியிட்டனர்.

'நாங்கள் 930 நாட்களாக இங்கு போராடிக்கொண்டிருக்கிறோம். இங்கு வந்த வரதர் முன்னர் ரணில் விக்கிரமசிங்க சொன்னமாதிரி காணாமல் ஆக்கப்பட்ட ஒருதரும் இல்லையென்று சொல்லியிருக்கிறார். இவர் என்ன தகுதியில் இதனைச் சொல்வார்? சர்வதேச விசாரணை வேண்டாம். உள்ளுர் விசாரணை ஒன்றும் வேண்டாம். ஒருதரும் இல்லை. எல்லோரும் கோத்தாபாயவுக்கு வோட்போடுங்கோ என்று சொல்லியிருக்கிறார். வோட்போடுற கதை சொல்லுறதுக்கு இவர் யார்? நாங்கள் இவருக்கு வோட் போடுற நிலைமையியா இருக்கிறோம்?

எங்களின்ர பிள்ளைகள் இருக்கிறதென்ற நல்லதொரு நம்பிக்கையோட இருக்கிறம். ஏனெண்டால் இந்த ஜனாதிபதிக்கு ஆதாரங்கள் காட்டியிருக்கிறம். ஓமந்தையில வைத்து கையளித்த பிள்ளைகள் எங்கே என்று கேட்கிறோம். யுத்தத்தின் பின்னர் காணாமல் போன பிள்ளைகள் எங்கே என்று கேட்கிறோம். இந்த ஜனாதிபதியோட நிற்கிற நான்கு பிள்ளைகளில ஒரு பிள்ளையதன்னும் விடுதலை செய்யவில்லை என்று வாதாடி, போராடிக்கொண்டிருப்பதை இவர் வந்து பார்;த்தவரோ? இதையெல்லாம் பார்க்காமல்தானே காணாமல் போனவர்கள் எவருமே இல்லையென்று சொல்லியிருக்கின்றார்.

இந்த செய்தியைக் கேட்டதில் இருந்து எங்களின்ர வயிறு கொதிச்சுக் கொண்டு கிடக்குது. நாங்கள் பொம்பிளைப் பிள்ளைகள், ஆம்பிளப் பிள்ளைகள் எல்லாரையும்தான் கொடுத்திட்;டு இரக்கிறோம் எத்தனையோ தாய்மார் புருஷன்மாரைக்கூட கொடுத்திட்டு இருக்கினம். இப்படி இருக்கும்போது இவர் தன்னுடைய குடும்பத்தை நினைத்தாரா? இவருக்கு இரண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை அங்கு கொண்டு பாதுகாப்பாக விட்டுவிட்டு, தாங்கள் தாங்கள் பதவிகளுக்குப் போக வேண்டும் தாங்கள் தாங்கள் பதவிகளோட இருக்க வேண்டும் என்ற ஆசையோடு எங்களுடைய பிள்ளைகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆசைக்காரர் எல்லோரும் வெளியேறிவிட வேண்டும்.

எங்களுடைய பேராட்டத்தைக் கேவலப்படுத்;தவோ, எங்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்கவோ யாராவது வந்தால், ஒவ்வொருவருடைய படங்களையும் வெளியிட்டு என்னென்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இவர் ஏன் இப்படி சொல்ல வேண்டும்? எங்களுடைய பிள்ளைகளைப் பற்றிக் கதைக்க வேண்டிய தேவை இவருக்கு இல்லை. எங்களுடைய பிள்ளைகள் காணாமல் ஆக்கப்படும்போது இவர்கள் இலங்கையில் இல்லை. ஓடி ஒளித்துவிட்டார்கள். யுத்தம் நடந்தபோது ஒருதர் வந்து குரல் கொடுக்கமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். தமிழர்களாக இருந்து எங்களுக்காகக் குரல் கொடுத்து எங்களைக் காப்பாற்ற முடியாமல்போன இவர்கள் இன்று எங்களுடைய பிள்ளகைள் இல்லை என்று முடிவு சொல்வதற்கு வந்திருக்கின்றார்கள். எங்களுக்கு இவர் ஒரு படுதுரோகி என கடுந்தொனியில் இந்த அமைப்பின் தலைவி தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு தாயார் கருத்து வெளியிடுகையில், நாங்கள் 930 நாளாக இந்த ரோட்டுக்கரையில எங்களுடைய பிள்ளைகளின்ற வரவைப் பார்த்து எல்லோரிடமும் கேட்டு கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் சிங்களவர்கள் அதைப்பற்றி மனம் இரங்காத நிலையில், எங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி கதைக்காமல், அவர்கள் தேர்தலை ஒரு பொங்கல் திருவிழா மாதிரி இருந்து கொண்டாடட்டும். அதேநேரம் அதில சேர்ந்த தமிழர் கோவில் கோவிலாக சென்று தேங்காய் உடைத்து பூசைகள் செய்து இன்னார் வா இன்னார் வா என்று எங்களுடைய தலையில நாங்களே சேறு அள்ளிக் கொட்டுகிற மாதிரி, எங்களுக்கு அநியாயம் செய்யிறதுக்கு சி;ங்களவர்களைக் கூப்பிடுகிறார்கள்.

அநியாயம் செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு முடிவு வரட்டும் என்று கேட்கிறதுக்கு ஆட்கள் இல்லை. இப்படி செய்து கொண்டு அவர்களுடைய சீவியப்பாடு நெடுங்காலம் ஓடிக்கொண்டிருக்குது. எங்களுடைய பிள்ளைகளுக்கு எப்போது முடிவு வரும்? என்ன சொல்லப் போறீங்கள்? எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களை வெளியில் எடுத்துவிட்டுவிட்டு நீங்கள் தேர்தலைக் கொண்டாடுங்கோ. இதுதான் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை என்பது குடும்ப உளவியல் சார்ந்த மிக மென்மையான உணர்வு. அது பாசப்பிணைப்பை அடிப்படையாகக் கொண்டது. நம்பிக்கையின் அத்திவாரத்தில் குடும்ப ஆதாரமாக எழுந்து நிற்பது. குடும்ப, சமூக, சமுதாயப் பின்னணியைக் கொண்ட அந்த உணர்வு, சமூக உளவியல் நிலைக்கு வளர்ந்து, அரசியல் உளவியலாக வளர்ந்து வியாபித்திருக்கின்றது.

இந்த விடயத்தில் ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதன் பேச்சாளர் சுமந்திரன் மட்டுமல்லாமல், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகிய ஆனந்த சங்கரியும்கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய இரத்த உறவினர்களின் மென்னுணர்வுகளை கருத்திற் கொள்ளாமல் கருத்து வெளியிட்டமைக்காக, வவுனியாவில் போராட்டம் நடத்தி வருபவர்களினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். அதன் ஓர் அம்சமாக கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் மூத்த தலைவருமாகிய இரா.சம்பந்தனின் உருவப் பொம்மையை வீதியில் இழுத்துச் சென்று தீவைத்த சம்பவமும் இடம்பெற்று தமிழ் அரசியலை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியிருந்தது என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயமானது. மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு நீதிகோரி போராடுபவர்களும்சரி, அதுபற்றி கருத்துரைப்பவர்களும் நிதானத்தைக் கடைப்பிடித்துச் செயற்பட வேண்டியது நல்லது.

தமிழ் மக்களின் அபிலாசைகள் சார்ந்த மிக நீண்ட அரசியல் உரிமைப் போராட்டத்தின்; முக்கியமானதோர் அம்சமாக வளர்;ந்தோங்கியுள்ளது. அது பல்வேறு பரிமாணங்களில் செல்வாக்கு செலுத்த வல்லது என்பதை இருதரப்பினரும் கவனத்திற்கொள்ள வேண்டியதும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது.

அருவி இணையத்துக்காக நிர்மலன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE