பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதே தனது இலக்காகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார்.
“ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை வழங்குவோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிம்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அந்த நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கிறோம்.
தற்போது கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கவே நாம் முயற்சித்து வருகிறோம். மக்கள்தான் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். நான் கட்சியின் பிரதித்தலைவராக இருக்கிறேன்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அவ்வாறு களமிறங்கினால், வெற்றி உறுதி என்பதையும் நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.
நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளேன். உண்மையில், எமக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. நாம் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.