கனடா – ரொறன்ரோ நகரில் வசித்து வந்தபோது கொலை செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த கனேடிய தமிழ் யுவதி ஷர்மினி ஆனந்தவேல் கொலையுடன் தொடா்புடைய மா்மம் 20 ஆண்டுகளின் பின்னரும் விலகாமல் நீடிக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தக் கொலையுடன் தொடா்புடைய குற்றவாளி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.
1999-ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து ஷர்மினி ஆனந்தவேல் குடும்பத்தினர் கனடாவுக்கு நாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். தன்னுடைய பெற்றோர் மற்றும் இரு சகோதரர்களுடன் டான் மில்ஸ் என்ற இடத்தில் ஷர்மினி வசித்து வந்தார்.
1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலை தேடி வடக்கு ரொறண்டோ சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அப்போது ஷர்மினியின் வயது 15 மட்டுமே.
காணாமல் போன ஷர்மினி பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். எனினும் 4 மாதங்களுக்குப் பின்னா் அவருடைய எலும்புகள் மட்டுமே கிடைத்தன.
சம்பவம் நடந்து 20 ஆண்டுகளான பிறகும் இப்போது வரை பொலிஸாரால் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை.
விசாரணையின்போது ஆனந்தவேல் குடும்பம் வாழ்ந்த அதே தொடர்மாடிக் கட்டிடத்தில் வாழ்ந்த வெள்ளை இனத்து இளைஞர் ஒருவர் வேலை எடுத்துக் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு ஷர்மினியை அவரது வீட்டில் அடிக்கடி சந்தித்த தகவல் தெரியவந்தது.
இந்த நபர் ஷர்மினி காணாமல் போனதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு வீடுமாறிப் போய்விட்டார்.
ஷர்மினி காணாமல் போன வாரத்துக்கு முதல் வாரம் இந்த நபர் வடயோர்க் தண்ணீர்த் தடாகத்தில் வேலை இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் ஒன்றை அவரிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.
ஆனால் ஷர்மினியை வேலைக்கு அழைத்த மெட்றோ சேர்ச் யூனிட் என்ற நிறுவனம்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அந்த நபர் பொலிஸாருக்குச் சொல்லி விட்டார்.
இந்தப் பெயரில் வேலை நிறுவனம் எதுவும் இல்லை என்றும் அது கொலையாளி அல்லது கொலையாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலிப் பெயர் என்றும் பொலிஸார் கண்டறிந்தனா்.
ஷர்மினியின் மரணம் கொலை என்பது நிரூபரணமாகியுள்ளது. கொலையுண்டவரின் எலும்புகள், சட்டைத்துணி போன்ற தடயங்கள் கிடைத்திருக்கின்றன. சந்தர்ப்ப சாட்சியங்களும் இருக்கின்றன. டிஎன்ஏ சோதனை நடாத்தப்பட்டுள்ளது. எனினும் இக்கொலையுடன் தொடா்புடைய யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
20 ஆண்டுகள் கடந்தும் ஷர்மினி மரணத்தின் மா்மம் விலகாமல் தொடா்கிறது.