கடலுக்குள் மூழ்கி தனது காதலை சொன்ன காதலன் நீரில் மூழ்கி பலியான சோகம் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
காதலை கவித்துவமாக எழுதி கடலுக்குள் 32 அடி ஆழத்தில் வைத்து வெளிப்படுத்தியபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மூச்சுத் திணறி காதலன் உயிர் பிரிந்தது.
லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரை சேர்ந்த ஸ்டீவன் தனது காதலி கெனிஷா ஆன்டோயினியுடன் தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு அவர்கள் கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் உள்ள மாண்டா எனப்படும் விடுதியில் தங்கினர்.
இதன்போது அதிக காதல் வயப்பட்ட ஸ்டீவன் வெபர் தண்ணீருக்குள் இறங்கி தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்தையும் திருமண மோதிரத்தையும் கண்ணாடி வழியாக விடுதிக்குள் இருந்த தனது காதலியிடம் காட்டினார்.
அந்த கடிதத்தில் அவர் 'உன்னைப் பற்றி நான் விரும்பும் அனைத்தையும் உன்னிடம் சொல்லும் அளவுக்கு என்னால் மூச்சு விட முடியாது. ஆனால் நான் உன்னைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் அதிகமாக நேசிக்கிறேன் என எழுதியிருந்தார்.
தனக்காக தண்ணீருக்கு அடியில் காதலர் செய்யும் செயல்களை கெனிஷா ஆனந்த கண்ணீருடன் பார்த்தவாறே அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்டீவன் தண்ணீருக்குள் கட்டுப்பாட்டை இழந்து மூச்சுத் திணறத் தொடங்கினார்.
அவரை காப்பாற்ற விடுதி ஊழியர்கள் முயன்றபோதும் அது முடியாமல் போய்விட்டது. ஸ்டீவன் வெபர் மூச்சு திணறி இறந்துவிட்டார்.
இந்த தகவலை புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் கெனிஷா ஆன்டோயினி பதிவிட்டுள்ளார். தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.