பயங்கரவாதத்துக்கு எதிராக போரை உறுதியாக முன்னெடுப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஐ.நா. பொதுச் சபையின் 74ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரிலுள்ள என்.ஆர்.ஜ. மைதானத்தில் இந்திய - அமெரிக்கர்கள் கலந்துகொண்ட 'மோடி நலமா' (ஹெளடி மோடி) எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்றினர்.
இதன்போது பேசிய இந்தியப் பிரதமர் மோடி, இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்பு இதயப்பூர்வமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய உச்சத்தை கண்டு வருகிறோம். அமெரிக்காவின் பொருளாதாரத்தை ட்ரம்ப் மீண்டும் வலுப்படுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்த உலகுக்காக அவர் சாதித்தவை ஏராளம். அடுத்தும் டரம்ப் அரசுதான் அமையும் என்றார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான போரை உறுதியாக முன்னெடுப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, அங்கு பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்து வந்தது. அதனை நீக்கியதன் மூலம் அப்பிராந்தியத்தில் வளர்ச்சியடைய வழி ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவு, இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தங்களது சொந்த நாட்டை நிர்வகிக்க தெரியாதவர்கள் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவால் நிம்மதியிழந்துள்ளனர் எனவும் மோடி கூறினார்.
இதேவேளை, இங்கு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து, அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன என்றார்.
நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்பதை இருநாடுகளும் உணர்ந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
என்னைத் தவிர இந்தியாவுக்கு உண்மையான நண்பர் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்திய - அமெரிக்கர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.