அமேசன் வனப் பகுதிகளில் காட்டுத்தீ விகிதம் இந்தாண்டில் அதிகரித்துள்ளது உண்மை தான் எனத் தெரிவித்துள்ள இந்தியாவுக்கான பிரேசில் தூதுவர், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பிரேசில் அரசு முழு ஈடுபாட்டுடன் தாம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமேசன் காட்டுத்தீ விவகாரத்தில், பிரேசில் அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
சில சர்வதேச நாடுகள், இதுகுறித்து விவரம் அறியாது தெரிவிக்கும் கருத்துகளால், இந்த விவகாரத்தில் பிரேசிலுக்கு பின்னடைவு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்கள் சுபஜித் ரோய் மற்றும் அமிதாப் சின்கா ஆகியோருக்கு இந்தியாவுக்கான பிரேசில் தூதர் ஆண்ட்ரே அரான்ஹா கோர்ரியா டு லாகோ அளித்த சிறப்பு பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.
அமேசன் வனப் பகுதி முழு இந்தியாவை விட பெரியது. இங்கு சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், அதனை எரித்தல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை கண்காணித்து தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அமேசன் விவகாரத்தில், பிரேசில் அரசு, மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக சில நாடுகள் கருத்து தெரிவிப்பது, இந்த பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும் எனவும் பிரேசில் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அமேசன் வனப்பகுதிகளிலேயே சட்டப்பூர்வ அமேசன் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 1950ஆம் ஆண்டு முதலே, இந்த பகுதியில், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, பிரேசில் அரசு பல்வேறுவிதமான வரிவிலக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அறுவடைக்கு பிறகு கழிவுகளை எரிப்பது போன்ற நடவடிக்கைகள், இங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாகவும், சிலநேரங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதுண்டு.
காடுகளை அழித்து வனப்பகுதிகளை சுருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிரேசில் அரசு 2005 ஆம் ஆண்டிலிருந்து போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
பிரேசில் அரச தலைவர் பொல்சோனாராவின் சீரிய முயற்சி மற்றும் நடவடிக்கைகளால், இந்தாண்டில் 80 சதவீத காட்டுத்தீ நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சட்டவிரோதமாக மரங்களை எரிக்கும் நடவடிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
மரங்களை சட்டவிரோதமாக வெட்டி வனப்பகுதிகளை சுருக்கும் நிகழ்வுகளை கண்டறிய புதிய யுக்தி கையாளப்பட்டு, வனப்பகுதிகளை சுருக்கும் நடவடிக்கைகளை போதுமானவரை கட்டுப்படுத்தியுள்ளோம் எனவும பிரேசில் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அமேசன் காட்டுத்தீ விவகாரத்தில், சில நாடுகள் மற்றும் அமைப்புகள், பிரேசிலின் நடவடிக்கைகளில் குற்றம்சாட்டி வருகின்றன.
அமேசன் விவகாரத்தில், பிரேசில் அரசு தனக்கென்று பிரத்யேக கொள்கைகளை வகுத்து அதன்படி செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்று வருகின்றது.
இந்நிலையில், எங்களது கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் செய்யவேண்டுமென்று சில நாடுகள் மற்றும் அமைப்புக்கள் அமைப்புகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் அவைகள் விபரம் புரியாது கருத்து தெரிவித்துவருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எங்களது நடவடிக்கைகளில் தலையிடவோ, மாற்றம் செய்ய வற்புறுத்தும் நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு பிரேசில் தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.