அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே முடிந்ததென ஜனாதிபதி தெரிவித்தார்.
கட்டுக்குறுந்த விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையின் 76ஆவது ஆரம்ப பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனன் தலைமையில் இன்று (05) முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அரசாங்க சேவையில் ஈடுபட்டோருக்கு மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதிலும், பொலிஸ் அதிரடிப்படைக்கு அத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
1980களின் ஆரம்பக் காலப் பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிரடிப்படை உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி அன்று தொடக்கம் இன்று வரை கடமையின்போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்குத் தேசத்தின் மரியாதை உரித்தாகும் என்றும் தெரிவித்தார்.