அமெரிக்காவின் - கன்சாஸ் நகரில் மதுபானசாலை ஒன்றுக்குள் நுழைந்த இளைஞன் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர்.
உள்ளுர் நேரப்படி இன்று அதிகாலை 1.27 மணிக்கு துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் கொலையாளி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் கொலையாளியைக் கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் உடனடியாகக் கிடைக்கவில்லை என கன்சாஸ் நகர பொலிஸ் அதிகாரி தோமஸ் டோமாசிக் கூறியுள்ளார்.
இறந்த நான்கு பேரும் ஹிஸ்பானிக் ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த ஐவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைத்துப்பாக்கி ஒன்றாலேயே இவர்கள் சுடப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன ரீதியான மோதல் காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கருதுவதற்கான எந்த காரணங்களும் இல்லை. இது ஒரு தனிப்பட்ட சம்பவமாகவே தெரிகிறது எனவும் பொலிஸார் கூறினர்.