ரஜினி படங்கள் பற்றிய அறிவிப்பு வந்தாலே போதும் ரசிகர்கள் வெகுவாக உற்சாகம் அடைந்து விடுவார்கள். அந்த வகையில் பேட்ட படம் செம ஹிட் அடித்தது. தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
இந்த படம் பொங்கல் ரிலீஸ் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட்டுகள் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த படத்தில் ரஜனி என்கவுண்டர் போலீசாக நடிக்கிறார் என்கிறார்கள். வெகு ஆண்டுக்கு பின்னர் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் சிவா கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியிருந்தார். அது ரஜினிக்கு வெகுவாக பிடித்து போய் உள்ளது. பட்டையை கிளப்பும் கதையாக அதை பட்டை தீட்டி உள்ளார் சிவா.
இதற்கிடையில் முருகதாசும் அடுத்த ஒரு கதையை ரஜினியிடம் கூற அதுவும் பிடித்து போய்விட்டதாம். இதனால் தர்பார் படத்திற்கு பின்னர் முருகதாஸ் இயக்கத்தில்தான் ரஜினி நடிப்பார் என்று தகவல்கள் பரபரத்தன. மேலும் இயக்குநர் சிவாவும், சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இதுவும் இந்த தகவலுக்கு வலுவேற்றியது.
இந்நிலையில் இயக்குநர் சிவா இயக்கத்திலேயே நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினி. சிவா கூறிய கதை மிகவும் பிடித்து இருந்ததால் அதையே தனது அடுத்த படமாக வெளிவர வேண்டும் என்று ரஜினி விரும்பியுள்ளார். இதனால் 2 நாட்களுக்கு முன்பு சிவாவுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ரஜினி.
இதனால் இந்த கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. தன் பிறந்த நாளுக்கு முன்பாக படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று ரஜினி கூறியிருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் முனைப்பு காட்டி வருகிறார் சிவா என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்கின்றனர். தன் கதையில் ரஜினி கூறிய சில கரெக்சன்களை செய்து திரைக்கதையை செம வலுவாக்கி ரஜினியிடம் கூறினாராம் சிவா. இந்த சுறுசுறுப்பு ரஜினிக்கு பிடித்து விட்டதால் குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால்தான் பச்சைக்கொடி காட்டினாராம்.