மாலி நாட்டின் வீதியோரம் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் ஐ.நா. சபையின் அமைதித் தூதர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மாலி நாட்டின் வடக்கு பகுதியை ஜிகாதி போராளி குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அவர்களை பிரான்ஸ் தலைமையிலான இராணுவத்தினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியாக கடந்த 2013-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் ஒருங்கிணைந்த நிலைப்படுத்துதல் இயக்கம் மாலி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
மாலியின் வடகிழக்கில் அகுவெல்ஹோக் நகரில் அமைதி தூதர்கள் பாதுகாப்பிற்காக நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் சென்ற வாகனம் சாலையோரம் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் சிக்கியது. இந்த குண்டு வெடிப்பில் ஐ.நா. சபையின் அமைதி தூதர் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஜனவரியில் அகுவெல்ஹோக் நகரில் இதேபோல் ஜிகாதி குழுக்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. சபையின் அமைதி தூதர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.