ஆபத்தாக மிகப் பெரிய சுறாக்களுடன் கடலில் அநாசயமாக நீந்தி அதிர்ச்சியூட்டும் சுறாக்களின் பிரதிபலிப்புக்களை படம் பிடித்து வெளியிட்டுள்ளார் ரிலே எலியட் என்ற கடல்வாழ் உயிரிணங்கள் குறித்த ஆராய்ச்சியாளர்.
இந்த முயற்சியின்போது 12 நீளமான இராட்சத சுறாவொன்று அவரது படகை ஆக்ரோசமாகக் தாக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளையும் அவர் பதிவு செய்துள்ளார்.
கனடாவில் பிறந்தவரான ரிலே எலியட் நியூசிலாந்தில் வசித்துவருகிறார்.
60 இற்க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று கடல் வாழ் உயிரினங்கள் குறித்து எலியட் ஆராய்ச்சி செய்துள்ளார்.
குறிப்பாக மாகோ சுறாக்கள் குறித்து அவர் ஆழமான ஆராய்ச்சிகளை செய்து அவை தொடர்பில் விவாதித்து வருகிறார்.
'நான் மாகோ சுறாக்களின் இயல்பு குறித்து ஆராய்ந்து அவை தொடர்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். எல்லா சுறா இனங்களை விடவும் இது மிக வேகமாகவும் தீவிரமானதாகவும் இருக்கிறது.' என்கிறார் கடல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற எலியட்.
33 வயதான அவர் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக கடலில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். உணவுகளைப் பயன்படுத்தி கடல்வாழ் உயிரினங்களை எலியட் தனக்கு நெருக்கமாக கவர்ந்திழுக்கிறார்.
தனது படகைக் கடிக்க சுறா எடுத்த முடிவின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அவர் விளக்கியுள்ளார்.
45 மைல் வேகத்தில் நீந்தக் கூடிய சுறா உணவின் வாசனையை நுகரும்போது அதனை அடைவதற்காக அந்த உணவைச் சுற்றியுள்ள எதனையும் மிரட்டும். இதுவே உணவு இருந்த எனது படகை அந்தச் சுறா கடிக்கக் காரணம்.
நாங்கள் கடலில் இருந்தபோது உணவைத் தேடி அதிகளவு சுறாக்கள் வந்தன. ஒவ்வொரு பெரிய சுறாவும் அங்கிருந்த சிறியவற்றை பயமுறுத்தி மிரட்டின என அவர் தெரிவித்தார்.
எல்லா விலங்குகளையும் போலவே சுறாக்களுடன் தொடர்பைப் பேணுவதும், அவற்றை அமைதிப்படுத்துவதும் அவற்றோடு இணைந்து வாழ்வதும் சாத்தியமாகும் என்றும் அவர் விபரிக்கிறார்.
தலைமுறை தலைமுறையாக மக்கள் சுறாக்களுக்கு பயந்து வளர்ந்திருக்கிறார்கள். அந்தப் பயம் புரிந்துகொள்ளக்கூடியது. ஒருவகையில் அவசியமானதும் கூட.
எனினும் சரியான பயிற்சியுடன் சுறாக்களுடன் பாதுகாப்பாக தொடர்புகொள்வது சாத்தியமாகும் என்கிறார் எலியட்.
சுறாக்கள் மிகவும் எச்சரிக்கையானவை. மனிதர்கள் நெருங்கும்போது அவை அஞ்சுகின்றன. சில வேளைகளில் அச்சம் காரணமாக தம்மைத் தற்காத்துக்கொள்ள அவை தாக்குகின்றன.
சுறாக்களை அணுகும்போது அதனுடனாக தொடர்பாடல் முக்கியமானது. ஒருவர் சுறாக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்? என்பதைப் பொறுத்தே அவற்றின் எதிர்வினைகள் அமையும்.
நீங்கள் ஒரு சுறாவுடன் நீந்த நேரிட்டால் அது உங்களை அவதானிக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் அலறித் துடிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். சுறாக்களுடன் மோதி வெல்ல நினைக்க வேண்டாம். அதில் நீங்கள் வெல்ல மாட்டீர்கள் என எலியட் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, சுறாக்களின் பாதுகாப்பு குறித்து எலியட் கவலை வெளியிடுகிறார். கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் இந்த இனங்கள் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டன.
சுறாக்கள் கடலின் மருத்துவர்கள். அவை கடலின் பாதுகாவலர்கள் என்கிறார் எலியட்.