வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக கல் அகழ்வுப் பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சுற்றுத்தல்களை சந்தித்து வருவதாகக் குற்றசாட்டுகின்றனர்.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள் உடைக்கபட்டு கற்கள் அகழப்பட்டுவருகின்றன.
பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வெடித்துச்சிதறும் கருங்கற்கள் அருகில் அமைந்துள்ள கலைமகள் கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வந்து விழுகின்றன.
இன்றயதினம் மாத்திரம் 15 பேரது காணிகளிற்குள் பெரியளவிலான கற்கள் வந்து விழுந்துள்ளதுடன், நான்கு வீடுகளின் கூரைத்தகடுகளும் சேதமடைந்துள்ளன.
இதேவளை நிலமட்டத்தில் இருந்து 100 அடிக்கும் ஆளமாக கற்கள் உடைக்கபடுவதால்,அருகில் உள்ள கிராமத்தின் கிணறுகளில் நிலத்தடி நீர் வற்றிக் காணப்படுகின்றது.
அத்துடன் அடிக்கடி கல்லுமலைகளுக்கு வைக்கப்படும் வெடி ஒலி காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.
குறித்த கல் அகழ்வு பணி நடைபெறும் “றங்கெத்கம” என்ற பகுதி வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை எல்லைக்குள்ளும், பாதிக்கப்பட்டுள்ள கிராமம் செட்டிகுளம் பிரதேச சபை எல்லைக்குள் வரும் தமிழ் கிராம்மாகவும் உள்ளன.
இதனால் இவ்விடயம் தொடர்பாக எங்கு சென்று முறையிடுவது என்பதில் குழப்ப நிலை காணப்படுவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை செயலாளரிடம் கேட்டபோது, குறித்த கல் அகழ்வுப் பணிக்கான வியாபார அனுமதி இந்த வருடம் தமது பிரதேச சபையால் கொடுக்கபட்டுள்ளது. இது தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை ஆராய்வதாகத் தெரிவித்தார்.