லித்தியம்-அயன் பற்றரியை மேம்படுத்தியதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு 2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை நோபல் குழு இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜோன் கூட்எனஃப், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத லித்தியம்-அயன் பற்றரிகள் கடந்த 1991-ம் ஆண்டு உலகச் சந்தையில் அறிமுகமாகி இன்று உலகின் பல்வேறு இடங்களையும் ஆட்சி செய்து வருகின்றன.
கைத்தொலைபேசி முதல் மின்னணு வாகனங்கள் வரை அனைத்திலும் லித்தியம்-அயன் பற்றரிகள் வந்துவிட்டன. குறிப்பிட்ட அளவு மின்சக்தியை சேமித்து வைக்கும் வகையில் லித்தியம் அயன் பற்றரிகள் பயன்படுகின்றன.
டாக்டர் விட்டிங்ஹாம், லித்தியம் பற்றரியில் இருந்து எலெக்ட்ரானை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் குட்எனப், லித்தியம் அயன் பற்றரியின் செயல்திறனை இரு மடங்காக உயர்த்தும் ஆய்விலும், பற்றரியின் பயன்பாட்டை பெருக்கவும், திறன்மிக்க வகையில் சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்ற ஆய்வுக்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பற்றரியில் இருந்து சுத்தமான லித்தியம் அயனுக்கு பதிலாக, தூய்மையான லித்தியத்தைதை பிரித்து எடுத்தமைக்காக டாக்டர் யோஷினோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து 9.18 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசும், தங்கப்பதக்கமும், விருதுப்பட்டயமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப்பணத்தை 3 விஞ்ஞானிகளும் பகிர்வார்கள்.