எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இடையில் பொது இணக்கப்பட்டினை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக சமூகங்கள் இணைந்து முன்னெடுத்த முயற்சியின் தொடராக இன்று நான்காம் கட்ட சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் வந்தாறு மூலை பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் இணைந்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்புக்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
ஏற்கனவே நடைபெற்ற மூன்று சந்திப்புக்களிலும் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் பிரேமச்சந்திரன் தவிர்ந்த ஏனைய கட்சிகளின் கீழ் மட்ட உறுப்பினர்கள் பங்குகொண்டு சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நான்காவது நாள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெறுகிறது.
இன்றைய சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வராசா கஜேந்திரன், அருந்தவபாலன் ஆகியோருடன் மதத் தலைவர்கள் அரசியல் ஆய்வாளர்கள் எனப் பலரும் பங்குகொண்டிருக்கின்றனர். இன்றைய சந்திப்பின் முடிவில் தீர்மானம் ஒன்று எட்டப்பட்டு அதில் கையெழுத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.