"தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 யோசனைகள் தொடர்பில் என்னால் இப்போது பதிலளிக்க முடியாது. ஆனால், தமிழ்க் கட்சிகளுடன் மனம்விட்டுப் பேசுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்."
- இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட 5 தமிழ்க் கட்சிகள் ஓரணியில் நின்று ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான தீர்மானத்தை எடுக்கவுள்ளன என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தக் கட்சிகள் எம்மைக் கூட்டாகச் சந்திப்பதற்கான ஏற்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளார். தமிழ்க் கட்சிகளுடன் மனம் விட்டுப் பேச நாம் தயாராக இருக்கின்றோம்.
ஆனால், அந்தக் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள 13 யோசனைகளில் தொடர்பில் என்னால் இப்போதைக்குப் பதிலளிக்க முடியாது. ஏனெனில், அந்தக் கோரிக்கைகள் - யோசனைகள் இன்னமும் எம்மிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேவேளை, தமிழ்க் கட்சிகளும் எம்முடன் இன்னமும் பேச்சுக்களை நடத்தவில்லை. இந்தநிலையில், அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் என்னால் உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. முதலில் தமிழ்க் கட்சிகள் எம்முடன் நேரில் பேச்சு நடத்தட்டும்" - என்றார்.