குழந்தை சுஜித்தை அரசாங்க இயந்திரம் கொன்றுவிட்டது எனக் கூறினாலும், அதில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. ஆம், அவ்வப்போது நிகழ்ந்தாலும் பச்சைக்குழந்தைகள் அல்லவா பலிகொள்ளப்படுகின்றன!
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிண்ற்றில், குழந்தைகள் விழுந்த சம்பவங்களின் எண்ணிக்கை 12 என்கிறது, அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரம் ஒன்று. இதில், இரண்டு நேர்வுகளில் மட்டும், நல்வாய்ப்பாக குழந்தைகள் உயிரோடு மீட்கப்பட்டனர். நான்கு விபத்துகளில் குழந்தைகள் மீட்கப்பட்டபோதும், அவர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பை, குழந்தைகளுக்கு எதிரான இந்த சமூகக் கட்டமைப்பு பறித்து நசுக்கிவிட்டது. குற்றுயிரும் கொலையுயிருமாக 88 அடி ஆழத்தில் ஐந்து நாள்கள் எப்படித்தான் கழித்தானோ, குழந்தை சுர்ஜித், உயிரற்ற உடலமாகவே மீட்கப்பட்டிருக்கிறான்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அடுத்தடுத்து விழிப்புணர்வுக் கருத்துகள் வெளியிடப்பட்டாலும் அதைச் செயல்படுத்தும் இடத்தில் மிக மோசமான நிலைமையே நீடிக்கிறது. தத்தம் குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை என்றபோதும், சமூக அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் பங்கு அதைவிட முக்கியமானது.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்துவிடாமல் தடுப்பதற்கான சட்டங்கள் மிக அண்மையாகத்தான் இயற்றப்பட்டுள்ளன. இந்திய அளவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தானேமுன்வந்து சுயவழக்காக எடுத்து, அனைத்து மாநிலங்களும் உரிய சட்டங்கள், விதிகளைக் கொண்டுவரவேண்டும் என தீர்ப்பளித்தது. எத்தனையோ வழக்குகளில் இப்படியான தீர்ப்புகள் வழங்கப்படுவதும் அவற்றை ஒன்றிய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல்விடுவதும் இயல்பைப்போல ஆகிவிட்டது. இதில் தமிழ்நாட்டில் பொதுநலன் வழக்கு ஒன்றும் சேர்ந்துகொள்ளவே, இங்கு இந்தப் பிரச்னையில் தமிழ்நாட்டு அரசு சில சட்டத்திருத்தங்களைச் செய்யும்நிலை உருவாகியது.
சென்னையில், சட்டம்படித்துக்கொண்டிருந்த சிவகாமி என்பவர் தொடுத்த பொதுநலன் வழக்குதான், இதற்குக் காரணமாக அமைந்தது. 2013 செப்டம்பர் 28 அன்று, திருவன்ணாமலை மாவட்டம், புலவன்பாடியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தேவி எனும் 4 வயது சிறுமி, பத்து மணி நேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டாள்; ஆனால், மருத்துவமனை செல்லும்வழியிலேயே குழந்தை இறந்துபோனாள். இந்த துயர சம்பவத்தை அடுத்தே, சட்டமாணவரான சிவகாமி சார்பில் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2014 ஆகஸ்ட்டில் அளித்த தீர்ப்பில், அரசுத் தரப்பு உரிய சட்டத்திருத்தங்களைச் செய்ய உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் அவகாசம் கேட்ட தமிழ்நாட்டு அரசுக்கு ஒப்புதலும் அளித்தது.
பெரிய அளவில் பொது அறிவித்தலும் விளம்பரமும் செய்யப்படாதநிலையில், வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள கூராம்பாடியில், இரண்டரை வயது குழந்தையான தமிழரசன், கைவிடப்பட்ட 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். எட்டு மணி நேரத்திற்குள் அக்குழந்தை மீட்கப்பட்டபோதும், அவனுடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த நேர்வைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில், வழக்குரைஞர் ஆகிவிட்ட கு. சிவகாமி, மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, மனுதாரரை எச்சரித்து வழக்கை முடித்துவைத்தது. காரணம், இடைப்பட்ட காலத்தில் 2015 பிப்ரவரியில் தமிழ்நாட்டு அரசின் சார்பில், ஊராட்சிகள் சட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை அரசுத்தரப்பு வழக்குரைஞர் தெரிவித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் சென்னைப் பெருநகரம் மற்றும் பிற நகராட்சிப் பகுதிகளில் இச்சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்பது தொடுத்தவர் தரப்பின் வாதம். அதையும் அரசுத் தரப்பில் மறுத்தனர். விதிகள் உருவாக்கப்படுவதற்குள்ளேயே நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என அடுக்கினார்கள். அதை ஏற்ற தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு, வழக்கை முடித்துவைத்தது.
இதில், ஒரு மாதத்திற்குள் உரிய சட்ட, விதிகளைக் கொண்டுவருவதாகக் கூறிய அரசாங்கம், ஊராட்சிப் பகுதிகளுக்கு 2015 பிப்ரவரியிலும் சென்னை மற்றும் பிற நகராட்சிகளுக்கு 2015 ஏப்ரலிலும்தான் அரசிதழில் புதிய விதிகளை வெளியிட்டது என்பது கவனத்துக்குரியது.
அரசாங்கம் சொன்னது; நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது; குழந்தைகள் காவுவாங்கப்படுவது மட்டும் நிற்கவில்லை என்பதை என்னவென்று சொல்வது?
வழக்குத் தொடுத்த கு.சிவகாமியிடம் பேசியபோது, “ இனி என்ன செய்தாலும் அந்தக் குழந்தையின் உயிரைத் திரும்பக்கொண்டு வந்துவிடமுடியாது. அபாயம் நிகழ்வதற்கு முன்னரே தடுக்கப்படவேண்டும் என்பதற்காகவே பொதுநலன் வழக்கு.. தீர்ப்பு வந்த பிறகும் இப்படியொரு கொடூரம் நிகழ்ந்துவிட்டது. பெற்றோரைக் காரணமாகச் சொல்வதைப் பற்றி என்ன சொல்ல.. எந்தப் பெற்றோராவது தங்கள் குழந்தையைக் குழியில் விழவேண்டுமென்றா நினைப்பார்கள்..!? சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதைச் செயல்படுத்தவேண்டிய அதிகாரிகள் அதைச் செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா..?..” என்றவர், சட்டங்களைக் கடுமையாக்குவது மட்டுமே அபாயங்களைத் தடுத்துவிடாது; அண்மையில் பேனர் விசயத்தில்கூட இதுதானே நடந்தது எனச் சுட்டிக்காட்டுகிறார், விசனத்தோடு!
அவரின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ஆர். இராஜேஷ் குமாரிடம் பேசினோம்.
“ சட்டத்தைச் செயல்படுத்துவதில் காட்டப்பட்ட அலட்சியம்தான் இந்தக் கொடுமைக்கு முக்கிய காரணம். இவ்வளவு மீட்புப்பணிகள் எல்லாம் செய்தார்கள்.. ஆனால் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) போட்டிருப்பதாகத் தகவல் உண்டா? ஆழ்குழாய்க் கிணற்றை மூடாததைக் கண்டுகொள்ளாத அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கைகூட வேண்டாம், ஒரு விசாரணை உண்டா? சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாம் இதில் என்ன செய்திருக்கிறார்கள்? செய்யாமல் இருந்தவர்களை என்ன செய்யலாம்? மாவட்ட ஆட்சியரும் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. பிரச்னை, சட்டம்போட்டபடி இருக்கிறது; நடைமுறையில் செயலாக்கம் உரியபடி இல்லை என்பதுதான். தகவல் உரிமைச் சட்டத்தைப் போல, ஆழ்துளைக் கிணறுகள் அனுமதி, அமைக்கப்பட்ட பின்னர் அவற்றின் நிலை, மூடப்பட்டுள்ளதைப் பற்றிய விவரம் ஆகியவை உள்பட்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிடவேண்டும். அப்படிச் செய்தால் உள்ளூர் அளவில்கூட அவற்றின் பாதுகாப்பு குறித்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களே அறிந்துகொண்டு, கவனத்துடன் இப்படியான துயரம் நிகழாமல் தடுக்கமுடியும்” என கூடுதல் யோசனைகளையும் சொல்கிறார், வழக்குரைஞர் இராஜேஷ் குமார்.
ஊராட்சி(கிராமப் பஞ்சாயத்து)ப் பகுதிகளுக்கு, பேரூராட்சி(டவுன் பஞ்சாயத்து)ப் பகுதிகளுக்கு, நகராட்சிப் பகுதிகளுக்கு, சென்னைப் பெருநகரப் பகுதிகளுக்கு என ஆழ்குழாய்க் கிணறு புதிதாக அமைக்கவும், ஆழப்படுத்தவும் அனுமதி அளிக்கக்கூடிய அதிகாரிகள் யார் யார் என வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. அனைவரும் மாதம்தோறும் அனுமதி அளிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட விவரங்களின் தொகுப்பை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கவேண்டும். அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர்வரை மேல்முறையீடு செய்து அனுமதியை எப்படி பெறுவது, காலக்கெடு எவ்வளவு என்பதற்கான விதிகள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. எந்தப் பகுதியாக இருந்தாலும், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் முன்னர் செய்யவேண்டியவை, கிணறுதோண்டும்போது இடைவேளை சமயத்திலும் செய்யவேண்டியவை, தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராவிட்டால் அதை எப்படி சிமெண்ட் மேடை அமைத்து, இரும்பு மூடி பொருத்தி பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என அளவுவாரியாக விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வளவு விதிகளையும் மதிக்காமல் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டால் அந்தப் பகுதி காவல்துறை ஆய்வாளர் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 304-2-ன்படி, நிலத்தின் அல்லது கிணற்றின் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, அவரைக் கைது செய்யமுடியும்.
இப்போது, நடந்தது என்ன?
நாடு மட்டுமா, உலகமே பார்த்துக்கொண்டிருக்க, அந்தக் குழந்தையின் ஒற்றை உயிருக்காக தமிழர் நிலங்களில் எல்லாம், இறைநம்பிக்கையாளர்கள் மனமுருக வேண்டிக்கொண்டிருக்க, இறுதியில் உயிர்ப்பலிதானே மிஞ்சியது!
- தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல் -
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: