இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் சிவா தபா மற்றும் வீராங்கனை பூஜாராணி ஆகியோர் ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் சோதனை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் அடுத்தாண்டு நடக்கிறது. இதற்கான சோதனை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனை போட்டி ஒன்றில் ஆண்களுக்கான 63 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சிவா தபா, கஜகஸ்தான் நாட்டின் தேசிய சாம்பியன் சனடாலி தொல்டாயேவ் என்பவரை எதிர் கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் நான்கு முறை ஆசிய பதக்கம் வென்ற சிவா தபா 5-0 என்ற புள்ளி கணக்கில் சனடாலியை அதிரடியாக வீழ்த்தி வெற்றி பெற்றார். இதேபோல் பெண்களுக்கான குத்து சண்டை போட்டியில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி - ஆஸ்திரேலிய நாட்டின் கெய்ட்லின் பார்க்கர் ஆகியோர் களம் கண்டனர்.
இதில் பூஜாராணி கெய்ட்லினை வீழ்த்தி தங்கம் வென்றார். இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: