அப்பாவிகளை கடத்தி வைத்துக் கொண்டு கப்பம் கேட்கும் பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுக்கும் செயற்பாட்டை நிறுத்த அனைத்து நாடுகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
மெல்பேர்னில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெய்ன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
வெளிநாட்டவர்களை கடத்திவைத்துக்கொண்டு கப்பம் கேட்கும் பயங்கரவாதிகளின் உபாயத்திற்குள் அரசாங்கங்கள் விழுந்துவிடக்கூடாது.
பணம் என்பது பயங்கரவாதிகளுக்கு ஒக்ஸிஜன் போன்றது. அதனை அவர்கள் பெற்றுக்கொள்ளும்போது அவர்களது இருப்பு உறுதியாகிவிடுகிறது. இந்த பயங்கரவாதிகளை அழித்தொழிப்பதற்கு ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு மறுபுறத்தில் அரசுகள் பயங்கரவாதிகள் கேட்கும் பணத்தையும் கொடுத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை - என்று அவர் கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு 8937 பேர் பயங்கரவாத செயற்பாடுகளின் விளைவாக கடத்தப்பட்டுள்ளார்கள்.
2004 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆட்களை கடத்திவைத்துக்கொண்டு பயங்கரவாத அமைப்புக்கள் கப்பம் கோரியபோது செலுத்தப்பட்ட பணம் 12 கோடி அமெரிக்க டொலர்கள் என்று ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
கடத்தப்படுகிறவர்கள் மீட்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், அதற்கு பணம் கொடுக்கின்றபோது நாளை இன்னொருவரை கடத்துவதற்கான விலையையும் சேர்த்தே கொடுக்கிறோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெய்ன் சுட்டிக்காட்டினார்.