சோமாலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை, வெள்ளம் காரணமாக 25 பேர் பலியாகினர். 47 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 2,70,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவசர நிலையில் உயிர்காக்கும் அறிவுரைகள் சோமாலியா அரசிற்கு வழங்கப்படுகிறது எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
5,47,000-க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாபெல் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது, பெல்ட்வெய்ன் நகரத்தில் அபாய அளவை தாண்டியுள்ளது. இதன் விளைவாக 2,32,000 பேர் சொந்த இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
ஹிர்ஷாபெல்லே, ஜுபாலாந்து மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள ஜூபா மற்றும் ஷாபெல் நதிகளின் அருகில் உள்ள பெரும்பாலான கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, என மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.