"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்குமாறு கோரினாலும், தமிழ் மக்கள் அதற்கு எதிரான தீர்மானத்தையே எடுப்பார்கள்."
- இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
நாவல வீதி, இராஜகிரியவிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்த அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை சாதாரண வெற்றியாகக் கருத முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டில் சில பிரதேசங்களுக்கென வரையறுக்கப்பட்ட கட்சிகளாகவே காணப்பட்டன. எனினும், இம்முறை அவ்வாறல்ல. அனைத்துப் பிரதேசங்களிலும் வெற்றி பெற வேண்டி தேவை அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சுதந்திரத்துக்குப் பின்னரும் பல ஆண்டுகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும், தமிழ்த் தலைவர்கள் தமக்கான சுகபோகங்களை அனுபவித்து சொகுசாகவே வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.
வடக்கில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மாத்திரமே அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்று தமிழ் மக்களுக்குச் சேவை செய்தார். அதன் பின்னர் எந்தத் தமிழ்த் தலைமைகளும் அரசுடன் இணைந்து செயற்படவில்லை. இதனால் அந்த மக்களுக்கு வருமானம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றியில் பாதகமான நிலைமையே ஏற்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்குச் சென்று மனித உரிமை மீறல் பற்றிப் பேசுபவர்கள் அந்த மக்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை. வடக்கு, கிழக்கு மக்களை வறுமை நிலைக்குத் தள்ளிய போரை யார் ஆரம்பித்தது என்று அந்த மக்களுக்குத் தெரியும். அதேபோன்று மகிந்த ராஜபக்சதான் போரை நிறைவு செய்து அபிவிருத்திகள் எதுவுமே அற்றுக் கிடந்த வடக்கில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்தார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.
போர் நிறைவடைந்த பின்னர் வடக்கில் மகிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை. கடந்த 4 வருடங்களில் இந்த அரசு எதையுமே செய்யவில்லை. இழந்த அபிவிருத்திகளை மீளப் பெறுவதற்கு கோட்டாபய ராஜபக்சவை மக்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மக்களும் நாம் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. கூட்டமைப்பு சஜித்துக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கோரினாலும் அவர்கள் அதற்கு எதிரான தீர்மானத்தையே எடுப்பார்கள். எனவே, வெற்றி மாத்திரமின்றி வெற்றி பெற்றதன் பின்னரான அபிவிருத்திகள் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் தொடரும். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" - என்றார்.