மாவீரர் தினத்தை ஒட்டி அம்பாறை மாவட்டத்தில் - கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய முயன்றோர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை துயிலுமில்லத்ததை சிரமதான முறையில் துப்புரவு செய்ய மாவீரர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் முன்வந்தனர்.
இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் துப்புரவு பணிகளை நிறுத்துமாறும் இல்லையேல் அனைவரையும் கைது செய்வோம் என்றும் மிரட்டினர்.
எனினும் இராணுவத்தினரின் அச்சுறுத்தலையும் மீறி துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து மீண்டும் வந்த இராணுவத்தினர் சிரமதானத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த அனைவரினதும் புகைப்படங்களையும், சுய விபரங்களையும் வழங்குமாறு வற்புறுத்தினர்.
இதன்போது அங்கு நடைபெற்ற சம்பவங்களை பதிவு செய்த ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினர் அச்சுறுத்தினர். அவர்களின் ஊடக அடையாள அட்டைகளைப் பெற்று பார்த்ததுடன், அவற்றை தங்களது தொலைபேசிகளில் படம் எடுத்துச் சென்றனர்.