" சிங்கள மக்களை ஏமாற்றுகின்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் கனவு நவம்பர் 16ஆம் திகதியுடன் கலைக்கப்படும்."
- இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பொலனறுவை நகரில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் விவகாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ சிங்கள மக்களை ஏமாற்றுகின்றார். அவரின் தேர்தல் அறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்மொழியில் ஒரு விதமாகவும், சிங்கள மொழியில் பிறிதொரு விதமாகவும் குறிப்பிடபபட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கான சமஷ்டி ஆட்சி முறைமைக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அடிபணிந்துள்ளமை இம்முறையே முதல் முறையாகக் காணப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்ப காலத்தில் இருந்து சட்டரீதியிலும், குறுக்கு வழியிலும் பல முயற்சிகளை முன்னெடுத்தது. அவையனைத்தும் தோல்வியிலே முடிந்துள்ளது. இன்னும் 8 நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இனவாதிகளின் கட்டளைக்கு இணக்கம் தெரிவிக்காத பலமான தலைமைத்துவத்துக்கான அரசு நிச்சயம் தோற்றம் பெறும்.
தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தற்போது உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் முன்னெடுத்த முறையற்ற தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தற்போது பயங்கரவாதி சஹ்ரானின் குடும்பத்தின் உதவியையும் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்த ஆகியோர் நாடியுள்ளார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் பயங்கரவாதி சஹ்ரானுக்கும் தொடர்பு இருந்ததாக பயங்கரவாதி சஹ்ரானின் மனைவின் ஆதரவுடன் குறிப்பிடுவதற்கு அரசு பல முயற்சிகளை முன்னெடுக்கின்றது. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு இம்முறை நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். சிறந்த தீர்மானத்தை நாட்டு மக்கள் இம்முறை எடுப்பார்கள். அரசில் அரசியல் சூழ்ச்சிகள் ஏதும் வெற்றிபெறாது" - என்றார்.