கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிசம்பர் 5 வியாழக்கிழமை புதிய நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளார்.
அன்று லிபரல் கட்சி தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்தின் 43-ஆவது பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் இணைந்து புதிய பொது சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதுடன், பாராளுமன்ற செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
தொடர்ந்து பிரதமர் ட்ரூடோவின் சிம்மாசன உரை இடம்பெறும். கவர்னர் ஜெனரல் ஜூலி பயட் பாராளுமன்ற முதல்நாள் அமர்வுக்குத் தலைமை தாங்குவார்.
சிம்மாசன உரையில், ட்ரூடோ தனது அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பட்டியலிடவுள்ளார்.
2019 தேர்தலில் ட்ரூடோ வழக்கிய முக்கிய வாக்குறுதிகளான காலநிலை மாற்றம், விலைக் குறைப்பு, துப்பாக்கிகளுக்கான கட்டுப்பாடு போன்ற விடயங்களுக்கு அவரது பேச்சில் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ட்ரூடோவின் உரை தொடர்பில் பாராளுமன்றில் ஆறு நாட்கள் விவாதம் இடம்பெறும்.
இதேவேளை, புதிய பாரளுமன்றத்தைக் கூட்டுவதற்கு முன்னதாக இந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பிரதமர் ட்ரூடோ பேசவுள்ளார்.
இதன் முதல்கட்டமாக பிரதான எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீரை ட்ரூடோ நேற்று சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட ட்ரூடோ, கடந்த மாதம் கனேடியர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் நான் கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறினார்.
இதேவேளை, தனது கட்சியின் முன்னுரிமைகள் என்ன? என்பதை விவாதிப்பதற்கும் புதிய அமர்வு எப்போது நடைபெறவுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் இந்தச் சந்திப்பின் மூலம் வாய்ப்புக் கிடைத்ததாக கன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீர்; தெரிவித்தார்.
நம் நாடு எப்போதையும் விட பிளவுபட்டுள்ளது. கனேடியர்களின் முன்னுரிமைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நம் நாட்டை முன்னேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயற்படவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
30 நிமிடங்கள் நீடித்த சந்திப்பை முடித்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆண்ட்ரூ ஸ்கீர், ட்ரூடோவின் பாராளுமன்ற உரையே அதிகாரத்தில் அவர்கள் தொடர்வதற்கான முதல் நம்பிக்கை வாக்காகக் கருதப்படும் என்றார்.
அவரது உரையில் உள்ள விடயங்களைப் பொறுத்தே அதனை ஆதரிப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பது குறித்து இதுவரை திட்டமிடவில்லை எனவும் ஸ்கீர் கூறினார்.
இதேவேளை, ட்ரூடோ அரசாங்கத்துடன் பாரிய கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்தால் அரசாங்கத்தை தோற்கடிக்க போதுமான பலம் அவர்கள் வசம் உள்ளது.
பெரும்பான்மை இல்லாத நிலையில் பிற கட்சிகளுடன் ஒத்துழைத்துச் செல்ல வேண்டிய நிலை ட்ரூடோ அரசாங்கத்துக்கு ஏற்படும்.
பாராளுமன்றம் டிசெம்பர் 5 ஆம் திகதி கூட்டபடுவதைத் தொடர்ந்து நவம்பர் 20 ஆம் திகதி தனது புதிய அமைச்சரவையை ட்ரூடோ அறிவிக்கவுள்ளார்.
ஒக்டோபர் 21- ஆம் திகதி இடம்பெற்ற கனேடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி 157 இடங்களையும், கன்சர்வேடிவ்கள் 121 இடங்களையும், பிளாக் கியூபெக்கோயிஸ் 32 இடங்களையும், என்.டி.பி. 24 இடங்களையும், பசுமைவாதிகள் 03 இடங்களையும் கைப்பற்றியமை தெரிந்ததே.