ஓமான் நாட்டில் குழாய் பதிக்க தோண்டிய குழிக்குள் புதையுண்டு 6 இந்திய தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
அரபு நாடான ஓமான் தலைநகர் மஸ்கட்டில் சீப் என்ற இடத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்து வந்தது. 14 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்திய கட்டுமான தொழிலாளர்கள் குழிக்குள் இருந்து தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பலத்த மழை பெய்ததால் மேலே குவிக்கப்பட்ட மண் திடீரென பள்ளத்துக்குள் சரிந்து உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை மூடியது.
இதில் உயிருடன் புதையுண்டு 6 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 மணி நேர போராட்டத்துக்கு பின்னரே அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதேவேளை, மஸ்கட் நகரின் சீப் பகுதியில் பெய்த கன மழையை தொடர்ந்து இந்தியர்கள் எனக் கருதப்படும் 6 தொழிலாளர்கள் பலியான தகவல் அறிந்து வேதனை அடைந்துள்ளதாக மஸ்கட் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த முழு விவரங்களை அறிய ஓமான் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். 6 தொழிலாளர்களை பற்றிய விவரங்களை கேட்டுள்ளோம் எனவும் தூதரகம் ருவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.