தீராத நோய்களால் அவதிப்படுவோரைக் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதிக்கும் சட்டத் திருத்த யோசனை நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் பெறும் முயற்சி நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் பல முறை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதனைச் சட்டமாக்கும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டு கால விவாதத்துக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை இந்த சட்டத் திருத்த யோசனை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கருணைக் கொலைச் சட்டத்துக்கு ஆதரவாக 69 எம்.பி.க்களும் எதிராக 51 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
எனினும், நடைபெறவிருக்கும் பொதுவாக்கெடுப்பில் இந்த சட்டத்திருத்தத்துக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இது சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம்; மருத்துவர் அல்லது செவிலியரின் உதவியுடன் தீராத நோயுடன் அவதியுறுவோர் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இதற்கு விண்ணப்பிக்கும் நோயாளி, தீர்க்க முடியாத வியாதி உடையவராகவும் 6 மாதங்களில் அவர் நிச்சயம் இறந்துவிடுவார் என்ற நிலையும் இருக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளும் இந்த சட்டத் திருத்த யோசனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.